» Publishers, Monetize your RSS feeds with FeedShow: More infos (Show/Hide Ads)
தமிழ்வலைப்பதிவுலகிலே ஆரம்பகாலத்திலிருந்து ‘ஈழநாதம்’ எழுதிவந்த பதிவரான ஈழநாதன் 29 செப்ரெம்பர், 2012 அன்று இந்தோனேசியாவிலே இறந்தார். பதிவர் என்பதற்கு அப்பாலும் அவர் தமிழிலக்கியம், ஆவணப்படுத்தல், சக மனிதர்களின் நலன் கருதிச் செய்தவை சிலாகிக்கத்தக்கவை.
ஈழத்தமிழ்நூல்களை ஆவணப்படுத்தும் நோக்கத்திலே ஆரம்பிக்கப்பட்ட நூலகம் திட்டத்திலே அவரின் செயற்பாடுகள் குறிப்பிடத்தக்கன.
தமிழ்ப்பதிவர்களிலே ஒருவரான அவரின் இழப்பிலே தமிழ்மணம் வருத்தமடைகின்றது. அவருடைய குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்மணம் தமிழ் வலைப்பதிவுகளின் தர வரிசை (Traffic Rank) கடந்த சில மாதங்களாக சரியாக இயங்கவில்லை. அந்தப் பிரச்சனை தற்பொழுது சரி செய்யப்பட்டுள்ளது.
புதிய பட்டியலை இங்கே பார்க்கலாம் – http://www.tamilmanam.net/blogs/traffic/ranking/1
பதிவர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்
நிர்வாகம்,
தமிழ்மணம்
மதம் சம்பந்தமான தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காகத் தமிழ்மணம் முற்றிலும் மதம் சார்ந்த பதிவுகளைச் சேர்க்காதிருப்பதை விதியாகக் கொண்டிருப்பதைத் தமிழ்மணம் பயனாளிகள் அறிவீர்கள். அதேநேரத்திலே, கருத்துச்சுதந்திரம் கருதி பொதுவான பதிவொன்றிலே வரும் மதம் சம்பந்தமான இடுகைகள் ஓரிரண்டைத் தமிழ்மணம் இணைக்கிறது.
ஆயினும், அண்மைக்காலத்திலே மதம் சம்பந்தமான இடுகைகளாலே சூடான இடுகைகள், வாசகர் பரிந்துரை, மகுடம் பிரிவுகள் தொடர்ச்சியாக, குழு அடிப்படையிலே வாக்கிடப்பட்டு நிரப்பப்படுவதாலே வேறு பல நல்ல இடுகைகள் தெரியாமலே மறைந்துபோவதைப் பலர் சுட்டிக்காட்டியிருந்தீர்கள். மேலும், கடந்த ஒரு வாரமாக, மதம் சார்ந்து இரு பிரிவினரிடையே ஏற்பட்டிருக்கும் சொந்தத்தகராறின் காரணமாக, தமிழ்மணம் வெறும் அவதூறுகளின் தொகுப்பாகக் காட்சியளிப்பதினை இனிமேலும் அனுமதிக்கமுடியாது. பதிவர்கள் சுயதணிக்கை செய்து பொறுப்புணர்வுடன் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கையோடு சில நாட்கள் எதையும் மட்டுறுத்தாது தமிழ்மணம் நிர்வாகம் அவகாசமளித்துப் பொறுத்திருந்தது. ஆயினும், அவ்வண்ணம் இதுவரை நடக்காததின் காரணமாக உடனடியாக நிர்வாகம் கீழ்க்கண்ட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.
1. அவதூறான இடுகைகள் உடனடியாக நீக்கப்படும்
2. தொடர்ச்சியான அவதூறுகொண்ட இடுகைகளையிடும் பதிவுகள் மொத்தமாக நீக்கப்படும்
பதிவர்களையும் இப்படியான அவதூறான, மதம் சார்ந்த இடுகைகள் தமிழ்மணத்திலே தோன்றும்போது வரும் வாரத்திலிருந்து சுட்டிக்காட்டுமாறு வேண்டுகிறோம். ஆயினும், தமிழ்மணத்துக்கான அஞ்சல்கள், பின்னூட்டங்களுக்குத் தொடர்ச்சியாக விளக்கமளிப்பதற்கும் உடனடியாக விளக்கமளிப்பதற்கும் நிர்வாகத்தினாலே முடியாதென்பதையும் தெரிவித்துக்கோள்கிறோம்.
தொடர்ச்சியான புரிதலுக்கு நன்றி.
தமிழ்மணம் நிர்வாகம்
அண்மையில் கூகுள்/பிளாக்கர் சில முகவரிகளை .in எனவோ பிற நாடுகளின் ஒற்றிலோ முடியும்படி அண்மையில் மாற்றி இருக்கிறது. ஆனால், தமிழ்மணம் திரட்டியிலே .com என்று முடியும் வகையில் தான் உங்கள் பதிவு இணைக்கப்பட்டிருக்கின்றது. அதனால், தமிழ்மணத்தில் இணைக்கும்போது சிக்கல் ஏற்படுகின்றது. இதற்கான தற்காலிகத் தீர்வாகக் கீழ்க்கண்ட சுட்டியைப் பயன்படுத்தித் தமிழ்மணத்திலே உங்கள் இடுகைகளைச் சமர்ப்பியுங்கள். (கவனிக்க: உங்கள் பதிவு முகவரியின் ஈற்றில் இன்னும் .com என்று சேர்க்கவும்)
பொது: http://tamilmanam.net/blog_home_update.php?url=http://yourblogname.blogspot.com
காட்டு: http://tamilmanam.net/blog_home_update.php?url=http://pudugaithendral.blogspot.com
இவ்வாண்டின் தமிழ்மணம் விருதுகள் நிகழ்வு குறித்து ஏற்கனவே அறிவித்திருந்தோம். ஆனால், அண்மையில் ஏற்பட்ட சில தவிர்க்க முடியாத நெருக்கடிகளால் நாங்கள் திட்டமிட்டிருந்தபடி விருதுகள் நிகழ்வை நடத்த இயலாதுள்ளது. பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் இது ஏமாற்றத்தை அளிக்கக்கூடும். அதற்காக எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நெருக்கடிகள் தீர்ந்தபின் விருதுகள் நிகழ்வை ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடியே நடத்தும் ஒரு வாய்ப்பு இருப்பினும், வேறு சில மாற்றங்களுடனும் நடத்தலாம் என்றும் எண்ணுகிறோம். அல்லது நுட்ப ரீதியாகத் தமிழ்மணம் தளத்தின் வேறு மாற்றங்களினூடாக நல்ல பதிவுகளையும் ஆக்கங்களையும் ஊக்குவிக்க முடியுமா என்றும் சிந்தித்து வருகிறோம். இது குறித்துத் தக்க தருணத்தில் மேற்கொண்டு விவரங்களும் அறிவிப்புகளும் வெளியிடப்படும்.
புரிந்துணர்வுடன் கூடிய உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.
தமிழ்மணம் குழு
தமிழ்மணத்தின் வளர்ச்சியிலும் சேவையிலும் அக்கறையும் ஈடுபாடும் கொண்டுள்ள பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் ஏனைய நலன்விரும்பிகளுக்கும் தமிழ்மணம் சார்பாக இந்நன்றிநவிலல்நாளன்று நன்றியைத் தெரிவிக்கின்றோம். இத்தகைய ஆதரவின்றி தமிழ்மணம் இத்துணை சிறப்பாகச் செயற்படமுடிந்திருக்காது.
தமிழ்மணத்தின் வேண்டுகோளை ஏற்று பணம் அனுப்பியுதவிய கீழ்க்காணும் பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் இந்நாளிலே தமிழ்மணம் நன்றி தெரிவிக்கின்றது.
Vetrivel Ramaswamy
Prakasam Giriraj
A Candeban
Ilamurugu S Periasamy
Manivasagam Mounasamy
Photocbe
Gurudev Ravindran
Sayenthiran Kathiresampillai
Durai Appadurai
Thennavan Ramalingam
Yesuvadian chellappan
Dhinesh Kumararaman
Varadarajan Radhakrishnan
Partheeban elangovan
Thillai Kumaran
Viji Palaniappan
Manimozhian Ramasamy Kandasamy
Ramalakshmi Thangarajan
Somu Ravichandran
Kayalvizhi Muthuletchumi
Singai Bloggers/ Ponnusamy Purushothaman
Arasu Chellaiah
மேலும் கடந்த காலத்திலே தமிழ்மணத்தினை இயக்குதற்கு உதவிய கீழ்க்காணும் நண்பர்களுக்கும் எம் நன்றி உரித்தாகும்.
Soma Ilangovan
V. G. Dev
Kumar Kumarappan
Thani Cheran
Peter Yeronimuse
Sendhil Murugan
Naga Ganesan
TMI members
மேலும், இவ்வாண்டு தமிழ்மணத்தின் விருதுகளைத் தேர்வு செய்வதிலே நடுவர்களாகக் கடமையாற்றி உதவிய பதிவர்களுக்குத் தமிழ்மணம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. விருதுகளுக்கான நூல்களையும் நிதியையும் வழங்கிய புரவலர்களுக்கு நன்றி.
கூடவே, அவ்வப்போது, தமிழ்மணத்திற்குத் தகுந்த ஆலோசனைகளையும் கருத்துகளையும் தந்து வழிப்படுத்திய பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் தமிழ்மணத்தின் நன்றி.
அத்துடன், தமிழ்மணத்திலே தம் விளம்பரங்களை வைத்துதவிய பதிவர்களுக்கும் நன்றி.
இனிவரும் ஆண்டுகளிலும் தொடர்ந்தும் தமிழ்மணம் தமிழ்ப்பதிவுகட்குச் சேவையாற்ற உங்கள் புரிந்துணர்வுடனான ஒத்துழைப்பினை வேண்டுகிறோம்.
இவ்வாண்டின் மிகச்சிறந்த இடுகைகளை தெரிவு செய்யும் பதிவுத் திருவிழா
தமிழின் முண்ணனித் திரட்டியாக விளங்கும் தமிழ்மணம் ஆண்டுதோறும் வலைப்பதிவில் வெளிவரும் சிறந்த இடுகைகளை தேர்வு செய்து விருதுகள் வழங்கி வருகிறது. இந்த ஆண்டும், 2011ம் ஆண்டில் வெளிவந்த படைப்புகளுக்கான விருதுகளை வழங்கும், “தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் – 2011” நிகழ்வு வரும் டிசம்பர் மாதம் தொடங்கி பொங்கல் தினம் வரை நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் விருதுகள் நிகழ்வு 20 பிரிவுகளில் நடைபெறும். கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் பெண் பதிவர்கள் மட்டுமே பங்கு பெறும் பெண் பதிவர்களுக்கான ஒரு தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வலைப்பதிவுகளில் பெண் பதிவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் பொருட்டே இந்தப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பதிவர்கள் வழங்கிய ஆலோசனைகளை கருத்தில் கொண்டு பெண் பதிவர்கள் 3 பொதுப் பிரிவுகளிலும், பெண் பதிவர்களுக்கான தனிப் பிரிவிலும் போட்டியிடும் வகையில் விதிமுறையில் மாற்றங்களை செய்திருக்கிறோம் (விரிவான விதிமுறைகள் கீழே வழங்கப்பட்டுள்ளது)
திரைப்படங்களைச் சார்ந்த இடுகைகளுக்கு ”திரைமணம் விருதுகள்” என்ற பெயரில் திரைமணம் தளம் மூலம் விருதுகள் வழங்கப்படும்.
தமிழ்மணம் விருதுகள் நிகழ்வு, பதிவர் வாக்கெடுப்பு, வாசகர் வாக்கெடுப்பு, நடுவர் குழு பரிசீலனை என மூன்று கட்டங்களாக நடைபெறும்.
விருதுகள் தேர்வு முறை
ஒவ்வொரு பதிவரும் தன்னுடைய பதிவே சிறந்தது எனப் பெருமிதம் கொள்ளும் உரிமையைப் பெற்றிருந்தாலும், இடுகைகளுக்கு உடனுக்குடன் கிடைக்கும் சக பதிவர்கள்/வாசகர்களின் பின்னூட்டங்கள் மூலமான அங்கீகாரமும் பதிவர்களை மேலும் ஊக்குவிக்கும் சக்தியாகத் திகழ்கிறது. அப்படிப்பட்ட இடுகைகளை வாசகர்கள் மீண்டுமொருமுறை திரும்பிப் பார்க்க வைத்து அங்கீகரிப்பதே இந்த விருதுத் தேர்வுக்கான அடிப்படை. அறிவிக்கப்பட்ட போட்டிகளுக்காக எழுதப்படும் படைப்புகளாக அல்லாமல், தன்னெழுச்சியாக வெளிப்பட்ட படைப்புகளே இந்தத் தேர்வுகளுக்கு கணக்கிலெடுக்கப்படுவதால் இதில் போட்டியோ, ஏமாற்றமோ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்குமென்றே நம்புகிறோம்.
இவ்வாண்டின் தேர்வுகள் கீழ்காணும் பிரிவுகளில் இருக்கும்:
1. படைப்பிலக்கியம் (கதை, கவிதை, போன்றவை)
2. காட்சிப் படைப்புகள் (ஓவியம், புகைப்படங்கள் போன்றவை)
3. நூல் விமர்சனம், அறிமுகம்
4. அறிவியல், விவசாயம், சுற்றுச்சூழல், மருத்துவம், தொழில்நுட்பக் கட்டுரைகள்
5. பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்
6. செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள்
7. அரசியல், சமூக விமர்சனங்கள்
8. பெண்கள் பிரச்னைகள், திருநங்கைகள் வாழ்வியற் சிக்கல்கள்
9. தலித் மக்களின் பிரச்சனைகள், மனித உரிமை, நிறவெறி (Racism) தொடர்பான கட்டுரைகள்
10. ஈழ மக்களின் வாழ்வியல், மனித உரிமை, சமூக, பொருளாதாரச் சிக்கல்கள்
11. தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல்
12. நகைச்சுவை, கார்ட்டூன்
13. சுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம்
14. பொருளாதாரம், வணிகம் தொடர்பான கட்டுரைகள்
15. தமிழ்க்கணிமை, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் இணையம் தொடர்பான கட்டுரைகள்
16. விளையாட்டு, உடல் ஆரோக்கியம், உடல்நலம் மற்றும் சமையல் தொடர்பான கட்டுரைகள்
17. பெண் பதிவர்கள் மட்டும் பங்கு பெறும் பிரிவு – எந்த இடுகைகளாகவும் இருக்கலாம்
18. தமிழிசை, நடனம், தமிழ் கிராமியக் கலைகள் தொடர்பான கட்டுரைகள்
இந்த 18 பிரிவுகள் தவிர சிறந்த சினிமா இடுகைகளுக்கான திரைமணம் விருதுகள் கீழ்க்காணும் பிரிவுகளில் வழங்கப்படும்.
19. திரைப்பட விமர்சனங்கள் – தமிழ் சினிமா விமர்சனங்கள்
20. உலக சினிமா விமர்சனங்கள், குறும்படங்கள், திரைப்படக்கலை, மாற்று சினிமா தொடர்பான படைப்புகள்
தேர்வு நடைமுறை:
1. தனிப்பட்ட இடுகை (post) அல்லது இடுகைத் தொடர்களே விருதுக்கு தேர்வு செய்யப்படும். வலைப்பதிவு முழுமைக்குமான விருது என்று எதுவும் இல்லை.
2. டிசம்பர் 1, 2010 முதல் நவம்பர் 30 2011 வரை எழுதப்பட்ட இடுகைகள் மட்டுமே விருதுகள் தேர்வுக்கு இடம்பெறும்
3. எந்தவொரு இடுகையையும் எழுதிய பதிவரே பரிந்துரை செய்யவேண்டும். ஒரே பதிவர் அதிகபட்சமாக மூன்று வெவ்வேறு பிரிவுகளுக்குப் பரிந்துரை செய்யலாம். ஆனால் ஒரு பிரிவுக்கு ஒரே ஒரு இடுகையை மட்டுமே பரிந்துரை செய்ய முடியும். மேலும் குறிப்பிட்ட இடுகையை ஒரு பிரிவுக்கு மட்டுமே பரிந்துரை செய்யலாம். பெண் பதிவர்கள் மூன்று பிரிவுகள் தவிர பெண் பதிவர்களுக்கான தனிப் பிரிவிலும் போட்டியிட முடியும்
4. உங்களது பரிந்துரைகளை அளிப்பதற்கென ஒரு சிறப்புத்தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான சிறப்புத் தொடுப்பும் வழிமுறைகளும் தமிழ்மணத்தில் பதியப்பட்டுள்ள பதிவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
5. பரிந்துரைக்கப்படும் படைப்புகள் 2011 ஆம் ஆண்டில் முதல் முறையாகப் எழுதப்பட்டிருக்கவேண்டும். பரிந்துரைகள் 2011 ஆண்டில் வெளியிடப்பட்ட முந்தைய ஆண்டுகளின் படைப்புகளின் மீள்பதிவுளாக இருத்தலாகாது.
6. தமிழ்மணம் விருதுத் தேர்வுகள் மூன்று கட்டமாக நடைபெறும்.
7. தமிழ்மணத்தின் முதற்கட்ட வாக்கெடுப்பு வலைப்பதிவர்களுக்கானது. தமிழ்மணத்தில் பதிவு செய்துள்ள வலைப்பதிவர்கள் அனைவரும் வாக்களிக்கலாம். ஒரு பதிவருக்கு ஒரு பிரிவுக்கு ஒரு வாக்கு என்னும் அடிப்படையில் வாக்குரிமை இருக்கும்.
8. இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு வாசகர்களுக்கானது. முதற்கட்ட வாக்கெடுப்பில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்கள் பெறும் இடுகைகள் இரண்டாம் கட்டப் பொது வாக்கெடுப்புக்குத் தெரிவு செய்யப்படும். இரண்டாம் கட்டத்தில் அனைத்து வாசகர்களும் (பதிவு இல்லாதவர்களும்) வாக்களிக்கலாம்.
9. பதிவர் வாக்குகளும் வாசகர் வாக்குகளும் 2:1 என்ற விகிதத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மொத்த வாக்குகள் கணக்கிடப்படும். இதில் தேர்வு பெறும் முதல் 5 இடுகைகள் மூன்றாம் கட்ட நடுவர் குழுவின் பரிசீலனைக்கு தேர்ந்தெடுக்கப்படும்.
10. தமிழ்மணம் நிர்வாகம், வலைப்பதிவர்களைக் கொண்ட நடுவர் குழு அமைக்கப்படும். கடந்த ஆண்டு பதிவர்களை நடுவர்களாக நியமிப்பது குறித்து சில மாறுபட்ட கருத்துக்களை சில பதிவர்கள் முன்வைத்து இருந்தாலும் நடைமுறையில் சாத்தியமான நடைமுறைகளையே தமிழ்மணம் பயன்படுத்த விரும்புகிறது. காரணம் விருதுகள் நிகழ்வு ஒரு நீண்ட நிகழ்வு. எனவே நடைமுறை சாத்தியமான நடைமுறைகளையே தமிழ்மணம் பின்பற்றும்.
11. அதே நேரத்தில் விருதுகள் ஒரு இடுகையின் தகுதி அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக நடுவர் குழுவுக்கும் சில விதிமுறைகளை உருவாக்கி இருக்கிறோம். நடுவர் குழுவில் இடம் பெறும் நடுவர்கள் தனித்தனியாக இடுகைகளை தேர்வு செய்து தமிழ்மணம் விருதுக்குழுவிற்கு அளிப்பார்கள்.
தமிழ்மணம் விருதுக் குழு இந்த மூன்று சுற்று வாக்குகளையும் கணக்கில் கொண்டு விருதுகளை அறிவிக்கும். நடுவர்களின் பெயர்கள் இறுதிவரை அறிவிக்கப் படமாட்டாது. விருதுகள் அறிவிக்கப்படும் பொழுது தான் நடுவர்களின் பட்டியில் வெளியிடப்படும். ஆனால் யார் யார் என்ன பிரிவில் நடுவர்களாக இருந்தார்கள் என்ற விபரம் அறிவிக்கப்படமாட்டாது. ஒருபிரிவுக்குள்ளேயும் கூட ஒரு நடுவருக்கு, மற்ற நடுவர்கள் யார் என்பது தெரியது.
12. நடுவர் குழுவில் இடம் பெறும் வலைப்பதிவர்களும் போட்டியில் கலந்து கொள்ளலாம். ஆனால் அவர்கள் கலந்து கொள்ளும் பிரிவில் விருதுகளை தேர்வு செய்ய இயலாது.
13. தமிழ்மணத்தில் இணைந்துள்ள பதிவர்களுக்குப் பரிந்துரைகள் அனுப்புவதற்கான வேண்டுகோள் வெளியிடப்படுவதுடன் விருது தெரிவுப் பணி தொடங்கும்.
14. கிழ்க்கண்ட தேதிகளை பதிவர்கள் குறித்துக் கொள்ளலாம்
- இடுகைகள் பரிந்துரைகளுக்கான காலக்கட்டம் – டிசம்பர் 1 – டிசம்பர் 10
- முதல் கட்ட வாக்கெடுப்பு – டிசம்பர் 11 – டிசம்பர் 20
- இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு – டிசம்பர் 21 – டிசம்பர் 30
- நடுவர் குழு வாக்கெடுப்பு – சனவரி 1 – சனவரி 10
- விருதுகள் முடிவுகள் அறிவிப்பு – பொங்கல் தினத்தன்று முடிவுகள் அறிவிக்கப்படும்
15. ஒவ்வொரு கட்டத்திலும் விரிவான அறிவிப்புகள் தமிழ்மண முகப்பில் வெளியிடப்படும். மின்னஞ்சலிலும் பதிவர்களுக்கு அறிவிக்கப்படும்.
பரிசு:
தமிழ்மணம் விருதுகள் சிறந்த எழுத்தினை ஊக்குவிக்கவே நடத்தப்படுகிறது. பரிசுத் தொகை ஒரு அடையாளத் தொகை மட்டுமே. அந்த அடையாளத்தை புத்தகங்களாகவே தமிழ்மணம் வழங்கும். வாக்கெடுப்பில் ஒவ்வொரு பிரிவிலும் அதிக வாக்குப் பெற்று முதலிடம் பெறும் பதிவுகளுக்குத் தலா ரூ.1000ம் (ஆயிரம் ரூபாய்), இரண்டாம் இடம் பெறும் பதிவுகளுக்குத் தலா ரூ.500ம் (ஐநூறு ரூபாய்) வழங்கப்படும். பரிசுத்தொகை நூல்களாகவே வழங்கப்படும். பதிவர்கள் தமிழ்மணம் வழங்கும் கூப்பனைக் கொண்டு சென்னை நியூ புக்லாண்ட்ஸ் புத்தகக்கடையில் தாங்கள் விரும்பும் நூல்களைப் பெற்றுக் கொள்ளலாம்
தமிழ்மணம்/திரைமணம் விருதுத் தேர்வு ஒருங்கமைப்புக் குழு
தமிழ்மணம் இணையத்தளம் 2004ல் இருந்து கடந்த ஏழு ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்மணத்தை தொடர்ந்து பயன்படுத்தி வரும் வாசகர்களுக்கும், பதிவர்களுக்கும் தமிழ்மணம் எவ்வாறு தனது கொள்கை முடிவுகளை அறிவிக்கிறது என்பதை நாங்கள் விளக்க வேண்டியதில்லை. என்றாலும் அண்மைக்காலங்களில் தமிழ்மணத்தில் இணைந்திருக்கும் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நாம் இதனை தெரிவிக்க வேண்டியுள்ளது.
தமிழ்மணம் தளம் தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. இந்நிறுவனம் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டு அமெரிக்க அரசாங்கத்தின் சட்டதிட்டங்களின் படி நடத்தப்படும் தொண்டு நிறுவனம். எனவே, தமிழ்மணம் தளம் என்பது ஒரு தனிநபரின் தளம் அல்ல. ஒரு நிறுவனத்தின் தளம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்மணம் தளம் தன்னுடைய கொள்கை முடிவுகளை எப்பொழுதும் தமிழ்மணத்தின் அதிகார்வப்பூர்வமான வலைப்பதிவான இந்த வலைப்பதிவிலும், மின்னஞ்சல் மூலமாக மட்டுமே அறிவித்து வந்திருக்கிறது. அதைத் தவிர வேறு எங்கும் அறிவிப்பது இல்லை. அதேபோல் தமிழ்மணத்தின் கருத்துக்களை அறிய விரும்புவர்களும், தம் கருத்துக்களைத் தமிழ்மணத்துக்குத் தெரிவிக்க விரும்புவர்களும் தமிழ்மணத்தின் மின்னஞ்சல் முகவரியான admin@thamizmanam.com என்ற மின்னஞ்சலுக்கு மட்டுமே தொடர்பு கொள்ளவும். தங்களுடைய பதிவுகளில் வெளியிடுவதால் எந்தப் பயனுமில்லை.
கடந்த சில மாதங்களாகவே தமிழ்மணம் முகப்பில் மிக மலினமாக எழுதப்படும் மொக்கைப் பதிவுகளும், ஒட்டி வெட்டும் காப்புரிமைகளை மீறும் பதிவுகளும், மத, ஜோதிடப்பதிவுகளும் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளதாயும், காத்திரமான எழுத்துகள் சில மணிநேரங்கள் கூட நிலைப்பதில்லை என்றும் வலைப்பதிவர்களும், வாசகர்களும் எங்களுக்குத் தொடர்ந்து கவலை தெரிவித்து வந்தனர். இது தமிழ்மணத்தின் நோக்கத்தையே தோற்கடிப்பதாயுள்ளது என்று நாங்கள் கருதியபடியால் முதல் இரண்டுவகைப் பதிவுகளை விலக்கவும் மூன்றாவது வகைப்பதிவுகளை வேண்டுமானால் விளம்பரப் பதிவுகளாக அனுமதிக்கவும் முடிவு செய்திருந்தோம். இம்முடிவைப்பற்றி இரு வாரங்களுக்கு முன்பு எம்முடைய நட்சத்திர வாரத்தில் மிகத்தெளிவாக அறிவித்தும் இருந்தோம்.
இம்முடிவின் அடிப்படையிலேயே கடந்த வாரத்தில் சில பதிவுகளை விலக்கவும் செய்தோம். எப்பதிவுகளை விலக்குவது என்பதை கீழே கொடுக்கப்பட்ட நான்கு நிர்வாகிகளே இணைந்து முடிவெடுத்து வந்திருந்தாலும், அம்முடிவை நடைமுறைப்படுத்துவதையும், தேவைப்பட்டால் பதிவர்களின் மின்னஞ்சல்களுக்குப் பதிலளிப்பதையும் எங்களில் யாரொருவருக்கு கால அவகாசம் இருக்கிறதோ அவர் செய்து வந்திருக்கிறோம்.
இருப்பினும் எங்களுடைய கொள்கைமுடிவை வேண்டுமென்றே தவறாகத் திரித்து சில மொக்கைபதிவுகள் எழுதப்பட்டன. இப்பதிவுகளில் திரிக்கப்பட்ட ஒருசிலதகவல்களை மட்டும் மறுக்கும் வண்ணம் எங்கள் நிர்வாகிகளுள் ஒருவர் ஒரு பதிவில் போய் தன்னுடைய கருத்தைப் பின்னூட்டமாகப் பதிவு செய்திருக்கிறார். கடந்த காலங்களில் கூட தொழில் நுட்பம் போன்றவற்றில் எங்களுடைய நிர்வாகிகள் ஓரிருமுறைகள் இதேபோல் பிற பதிவுகளில் விளக்கம் அளித்திருக்கிறபடியால் இம்முறையும் ஒருநிர்வாகி விளக்கம் அளிக்க முற்பட்டிருக்கிறார். இதுபோன்ற பின்னூட்டங்கள் எவையுமே தமிழ்மணத்தின் பயனர் கணக்கின் கீழ எழுதப்பட்டவை அல்ல. நிர்வாகிகளின் சொந்த மின்னஞ்சற் கணக்குகளிலே எழுதப்பட்டவையே என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அவை தமிழ்மணம் குழுவில் அனைவராலும் இணைந்து தயாரிக்கப்பட்ட வரைவாக இல்லாமல் நிர்வாகிகளின் தனிப்பட்ட கருத்துகளாகவே எழுதப்பட்டவை. மேலும் குறிப்பிட்ட அப்பதிவில் அவர்மேல் சில அனானித் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டிருப்பதால் அந்த நிர்வாகியும் ஒரு விளக்கப் பின்னூட்டத்தோடு நிறுத்தாமல் தொடர்ந்து வாதம் செய்ய அதுமுழுச் சண்டையில் போய் முடிந்திருக்கிறது.
தமிழ்மணம் நிர்வாகி தன் சொந்தப்பெயரில், தன் சொந்தக் கருத்துக்களைப் பின்னூட்டமிட்டாலும், அவர் தமிழ்மணம் நிர்வாகத்தின் முடிவை விளக்க முற்பட்டதால் அவை தமிழ்மணத்தின் கருத்துகளாக ஒருசிலரால் தவறாகக் கருதப்பட்டிருக்கலாம். அவரின் சொந்தக் கருத்துகளுக்கும், தமிழ்மணம் குழுவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைத் தெளிவாகக்கூறி இக்குழப்பம் நிகழ்ந்ததற்கு எங்கள் வருத்தத்தைத் தெரிவிக்கிறோம்.
எங்கள் நட்சத்திர இடுகைகளில் சொல்லப்பட்ட முடிவுகளை மீண்டும் ஒருமுறை வலியுறுத்த விரும்புகிறோம். தமிழ்மணம் காத்திரமான பதிவுகளைத் திரட்டும் தளமாகப் பயணிக்க விரும்புகிறது. வெற்று ஆரவார மொக்கைப் பதிவுகள் தமிழ்மணம் முகப்பை ஆக்கிரமிப்பது குறித்து பல பதிவர்களும் வாசகர்களும் எங்களுக்கு விடுத்த வேண்டுகோள்களைச் சார்ந்தே தற்பொழுது சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந்த நடவடிக்கைகள் தமிழ்மணத்தை ஒரு ஆக்கப்பூர்வமான பாதைக்கு கொண்டு செல்லும் என நம்புகிறோம். தமிழ்மணத்தின் இந்தக் கருத்தினைச் சார்ந்த விமர்சனங்களை வரவேற்கும் அதே நேரத்தில் இந்த கொள்கை முடிவினை விரும்பாதவர்கள் தமிழ்மணத்தில் இருந்து விலகிக் கொள்வதையும் வரவேற்கிறோம். விலக நினைப்பவர்கள் தமிழ்மணம் மின்னஞ்சல் முகவரியான admin@thamizmanam.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்.
தமிழ்மணம் நிர்வாகிகள்
தமிழ் சசி
செல்வராசு
சொ. சங்கரபாண்டி
இரமணீதரன்
இந்த வாரம் நட்சத்திரப் பதிவுகளில் தமிழ் மணத்தைப் பற்றியும், டி.எம்.ஐ. நிறுவனத்தைப் பற்றியும் சில தலைப்புகளில் உங்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டோம். பின்னூட்டங்கள் வாயிலாக கருத்துக்களையும், ஆலோசனைகளையும், விமர்சனங்களையும் நல்கிய பதிவர்கள் அனைவருக்கும் எங்களது நன்றி.
நாங்கள் நட்சத்திரவார முதல் இடுகையில் கூறியபடி பல்வேறு சவால்களுக்கும், நேரப்பற்றாக்குறைக்குமிடையே தமிழ்மணத்தின் சேவையை மேலும் எவ்வளவு செம்மைப்படுத்த முடியுமோ, அவற்றுக்கான முயற்சிகளைத் தொடர்வோம். தொழில்நுட்ப அடிப்படையிலான மாற்றங்கள் பெரும்பாலான பதிவர்களையும் வாசகர்களையும் மனதில் வைத்தே செய்யப்படுகின்றன. சில நேரங்களில் தமிழ்மணம் நிர்வாகத்துக்கு வரும் மின்னஞ்சல்களில் வைக்கப்படும் பயனான வேண்டுகோள்களின் அடிப்படையிலும் மாற்றங்களைச் செய்ய முன்வந்தது. ஆனால், தொழில்நுட்ப மாற்றங்கள் இயன்றவரை மனிதத்தலையீடு இல்லாமலே தானியங்கியாகச் செயற்படுத்தப்படுகிறன. சில மாற்றங்கள் பதிவர்கள் சிலருக்குப் பிடித்தமற்றவையாகவிருக்கலாம். சில மாற்றங்கள் நிரந்தரமானதாக அல்லாமல் பரிசோதனை முயற்சிகளாகவும் இருக்கலாம். எம்மாற்றத்தையுமே வலைப்பதிவுகளில் ஒரு சிலர் தவறுதலாகப் புரிந்து கொள்ளக்கூடிய அபாயமிருந்து வருவதால் இயன்றளவு அனைத்துத்தரப்பினரையும் திருப்திப்படுத்த ஏதாவது செய்ய முடியுமா என்று சிந்தித்தே மாற்றங்களைச் செய்கிறோம். இதற்காக உழைக்கும் எங்கள் தொழில்நுட்பக்குழுவைச் சேர்ந்தவர்கள் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
அடுத்தபடியாக, பதிவரும் பயனரும், நிர்வாகத்தைப் பற்றியும் நாங்கள் முகங்கொடுக்கவேண்டிய சவால்களையும், அவற்றை எப்படி நாம் வகுத்துக்கொண்ட நெறிக்கோவையின் அடிப்படையில் எதிர்கொள்கிறோம் என்றும் இடுகைகளில் எடுத்துரைத்தோம். இங்கும் மேலே தடித்த எழுத்துகளில் சொல்லியவற்றையே மீண்டும் வலியுறுத்த விரும்பிகிறோம். மேலும், எங்களுடைய முழுநேரத்தொழிலுக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்குமிடையே எங்களாலியன்ற அளவு நேரத்தைச் செலவிட்டு, பயனர் நிர்வாகத்துக்கு வரும் மின்னஞ்சல்களுக்குக் இயன்றளவு விரைவாகவே பதில் அளிக்கிறோம். எங்கள் தளத்தின் உதவிப்பக்கங்களில் சில பயனுள்ள தகவல்கள் வைக்கப்பட்டிருப்பதால், உங்கள் மற்றும் எங்கள் நேரம் கருதி அவற்றை முதலில் படித்துவிட்டு பயனில்லையெனில், எங்களுக்கும் அஞ்சல் அனுப்புங்கள்.
அடுத்து, உங்கள் பதிவுகளிலும், மின்னஞ்சல் முகவரி போன்ற தனிப்பட்ட தகவல்களிலும் மாற்றமிருந்தால் அவற்றைப் பற்றி உடனடியாக எங்களுக்குத் தெரிவியுங்கள். இல்லாவிட்டால் சில நேரங்களில் அதனாலேயே சிக்கல்கள் ஏற்படுவதுண்டு. எடுத்துக்காட்டாக சில பதிவர்களுக்கு தமிழ்மணம் விருது பற்றியோ, நட்சத்திர அழைப்புக்கோ அனுப்பிய மின்னஞ்சல்கள் திரும்பி வந்திருக்கின்றன. பதிவர்கள் தங்கள் பதிவுகளை தமிழ்மணத்துடன் இணைந்த காலத்தில் கொடுத்த மின்னஞ்சல் முகவரிகளே எங்களுடைய தரவுப்பட்டியலில் இருக்கின்றபடியால், அவை தவறானவையென்றால் எங்களால் வேறு வழிகளில் உங்களைத் தொடர்பு கொள்ள இயலாது.
இவ்வாரம் தமிழ்மணத்தில் திரட்டப்படும் பதிவுகளை வகைப்படுத்துவதையும் வடிகட்டுவதையும் பலரும் வரவேற்றிருப்பது நிறைவானதாக இருக்கிறது. இச்சீரமைப்பொன்றும் புது வழிமுறையல்ல. ஏற்கனவே வகுக்கப்பட்டதுதாம். திரைப்படம் சார்ந்த பதிவர்களின் சொந்தக்கருத்துகளுடனான பதிவுகளைத் திரட்டத் திரைமணத்தினைத் தமிழ்மணம் தந்திருக்கையிலே, திரைப்படத்துக்கென ஒரு பதிவினை உருவாக்கித் திரைமணத்திலே சேருங்கள். தமிழ்மணத்திலே திரைப்பட இடுகைகளைச் சேர்க்கும்போது, அவை தானியங்கித்தேர்வினாலே தாமாகவே முகப்பிலே தோன்றாமற்போகும். ஆங்கில இடுகைகளுக்கும் அதே தோன்றாத நிலையோ, தோன்றினால், விலக்கப்படும் நிலையோதான் உண்டு.
வெட்டி ஒட்டும் பதிவுகள், சாதி/மத/சோதிட/அரசியற் கொள்கை பரப்புப்பதிவுகள், தனிமனிதத்தாக்குதற்பதிவுகள் போன்றவற்றை எக்காரணத்தினாலும் தமிழ்மணம் ஆதரிக்காது. இவற்றை உணர்ந்து பதிவர்கள் தாமே தக்க பதிவுகளைமட்டும் தமிழ்மணத்திலே இணைத்தால் இவற்றைக் கண்காணிக்கவோ நடவடிக்கை எடுக்கவோ தமிழ்மணத்துக்கு அவசியமில்லை. அதே சமயம் தனியாட்கருத்துச் சுதந்திரத்திலே தலையிடவோ தடையிடவோ தமிழ்மணத்துக்கு விருப்பமும் உரிமையுமில்லை. சமூகத்தின் பல திசைகளிலிருந்தும் கருத்துக்களும் குரல்களும் ஒடுக்கப்படாமல் ஒலிக்கத் தமிழ்மணம் தளத்தை அமைத்துக்கொடுக்கவேண்டும் என்பதே எங்கள் செயற்பாடுகளுக்கான ஒரே உந்துதல்.
மேற்சொன்ன இரு நோக்குகளும் சமயத்தே எதிரெதிர்த்திசைகளிலிருந்து வருவதைப்போலத் தோன்றினாலும், ஒன்றோடொன்று முரண்படாமலிருக்கக்கூடிய ஒன்றுதானெனத் தமிழ்மணம் நம்புகிறது. மிகச்சில சந்தர்ப்பங்களிலே இடுகைகளின் உள்ளடக்கங்களாலே இந்நோக்குகளிலே குழப்பம் நேரலாம். அவற்றைமட்டும் தனியே பரிசீலித்து தமிழ்மணத்துக்கு ஏற்புடைய இடங்களில் ஏற்றும், ஏற்பில்லா இடங்களில் விலக்கியும் செயற்பட விழைகிறோம்.
மேலும், தம்கருத்துகளைப் பதிவர்கள் பதிவிடுவதைத்தான் தமிழ்மணம் ஊக்குவிக்கின்றது; உரிமை பெறாத படங்களைத் தொகுப்பாக்கியோ, கருத்துகளை அப்படியே பிற இடங்களில் இருந்து வெட்டி ஒட்டியோ வரும் பதிவுகளைக் கடந்தகாலத்திலே அவ்வப்போது அகப்பட்டபோது நீக்கிக்கொண்டிருந்தாலுங்கூட, இவ்வாரம் ஒவ்வொன்றாகத் தேடி முடிந்தவரை விலக்கிக்கொண்டிருக்கிறோம். ஒவ்வோர் இடுகையையும் எங்களாலே பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்பதால் இவ்விடத்தில் பதிவர்களும் பயனர்களும் இருகண்களாக இருந்து தெரிவிக்கக் கோருகிறோம். தமிழ்மணத்தின் சிறப்பிற்கு டி.எம்.ஐ நிர்வாகக் குழுவினர் மட்டுமன்றி, பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் காரணமே. இவ்வாரத்திற்கூட சில பதிவர்கள் இப்படியான வெட்டி ஒட்டுப் பதிவுகளைத் தக்க ஆதாரங்களுடன் பதிவர்கள் சுட்டிக்காட்டியபோது அவற்றை உடனடியாக நீக்கினோம். எப்போதாவது ஒன்று என்றுங்கூட பிறரின் உரிமைபெற்ற படைப்புகளை வெட்டி ஒட்டுதலையோ பிடிஎப் வடிவத்திலோ எம்பி3 ஒலியவடிவிலோ தமிழ்மணத்திலே இணைப்பதை நாங்கள் ஆதரிக்கவில்லை; ஆதரிக்கவும்முடியாது. தகவற்சேகரிப்பிற்கு, பரப்பலுக்கு என்னும் சப்பைக்காரணங்களைத் தமிழ்மணத்திலே தம்பதிவுகளை இணைக்கப் பதிவர்கள் விரும்பும்போது ஏற்றுக்கொள்ளமுடியாது. படைப்புரிமையும் பதிப்புரிமையும் அறிவுச்சொத்துரிமையும் சட்டப்படி வரையறுக்கப்பட்ட காலம்வரைக்கும் அவற்றின் உரிமையாளருக்கானதுமட்டுமே. பிறர் படைப்புகளின் தேவையான சுருக்கமான சில பகுதிகளைமட்டும் மேற்கோள்காட்டி தகுந்த உசாத்துணைகளுடன் அவை சார்ந்த கருத்துக்கள், எதிர்வினைகள், திறனாய்வுகள் என்று வருகின்ற பதிவுகளைப் பற்றிய கருத்தல்ல இது. அப்படியான இடுகைகள் முற்றிலும் தமிழ்மணத்துக்கு ஏற்புடையவையே. இதனால், தொடர்ந்தும் பதிவர்கள், இப்படியாக ஒத்தி-ஒட்டப்படும் இடுகைகள், காப்புரிமையுள்ள நூல்களின் பிடிஎப் கோப்புகள், காப்புரிமையுள்ள பாடல்களின் ஒலியிழைகள் இவற்றினைத் தமிழ்மணத்திலே திரட்டப்பட்டிருக்கும் பதிவுகளிலே கண்டால், இடுகையின் முகவரி, மூலப்படைப்பின் இணைய முகவரி அல்லது உரிமை இவற்றினைத் தமிழ்மணத்துக்கு இலகுவாகச் சுட்டிக்காட்ட வசதி செய்யமுயற்சிக்கிறோம். அதுவரை, எமக்கு மின்னஞ்சலினாலே அறியத்தாருங்கள்.
இவை தவிர, தமிழ்மணத்தின் மீது ஆதாரமற்ற வெறுமையான அவதூறாகவும் பிற பதிவர்களின் மீது தனியாள் தாக்குதலுமாக அமைந்த காரணத்திற்காகவும் சில பதிவுகளை நீக்கி இருக்கிறோம் என்பதையும் குறிப்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்மணத்தின் நுட்ப மற்றும் செயற்பாட்டுக் குறைகளைச் சுட்டிக் காட்டுவதையும் விமர்சிப்பதையும் நாங்கள் என்றுமே தவறாக எடுத்துக் கொண்டதில்லை. சில சமயம் அவை தமிழ்மணத்தினை மேம்பாடாக்க எமக்கு உதவுவதால் அவற்றைக் கருத்திற் கொண்டு செயல்படுகிறோம். சில சமயம் அவை நடைமுறைக்கு ஏற்புடையதல்ல எனப்பட்டால், நிராகரித்து விடுகிறோம். ஆனாலும், அவற்றைச் சொல்லும் உரிமை பிறருக்கு உண்டு என்பதை ஏற்றுக் கொள்கிறோம். அதே சமயம், மறுப்பதின் காரணத்தினாலேயே தமிழ்மணத்தின் நோக்கங்களையே சந்தேகிக்கும்படியான கட்டுக்கதைகளைப் புனைவதையும் ஆதாரமின்றி அவதூறு செய்வதையும் ஏற்க மறுக்கிறோம்.
சொந்த நேரத்தையும் பொருளையுமிட்டுத் தன்னார்வத்தொண்டாக இலாப நோக்கற்ற அமைப்பாகச் செயற்பட்டு வருகையில், அதனையும் தொடர்ந்து செய்ய ஏற்பட்ட சிரமங்களின் காரணமாகப் பிறரிடம் எந்தக் கட்டாயங்களுமின்றித் தன்விருப்ப நன்கொடைகள் பெற்றுக் கொள்ளப் ஆண்டுகள் இத்தனை கழித்தே முடிவு செய்தோம். தமிழ்மணத்தின் வேண்டுகோளை ஏற்று நிதி அனுப்பிவைத்த பதிவர்கள், பயனர்கள், நலம்விரும்பிகள் அனைவருக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றியை இவ்விடத்திலே தெரிவித்துக்கொள்கிறோம். நிதி அனுப்பிய ஒவ்வொருக்குமான பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்திய நன்றி அஞ்சல் (தொகை உள்ளிட்டு) இயலுமானவரை உடனுக்குடன் அனுப்பியிருந்தோம். அவ்வாறு யாரேனும் உறுதிப்படுத்தும் அஞ்சல் பெற்றிராவிட்டால், தயைகூர்ந்து தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு மின்னஞ்சல்மூலம் அறியத்தாருங்கள்.
விளம்பரங்களையும் தமிழ்மணத்தின் நோக்கங்களுக்கு முற்றிலும் முரணாகவோ, வாசக அனுபவத்திற்குக் குறையுண்டாகும்படியோ இல்லாவிடத்திலே ஏற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறோம். இச்சூழலில், தமிழ்மணம் பொருளீட்டுவதையே முதன்மையாகக் கொண்டிருக்கிறதெனும்படியான அவதூறைப் பரப்பிக்கொண்டிருக்கும் பதிவுகளை நீக்கவேண்டிய அவநிலையேற்படுகின்றது.
பல காலமாகப் பதிவுலகில் சச்சரவுகளுக்குக் காரணமாக இருந்தாலும், தமிழ்மணமும் அதன் நிர்வாகிகளும் அந்நிகழ்வுகளின் காரணமாகத் தேவையின்றி தாக்குதல்களுக்கு உள்ளானபோதிலும், ஓரளவிற்கு அஃது பதிவரின் தனியாள் சுதந்திரம் என்று பொறுத்தே வந்திருந்தாலும், அண்மையில், சில பதிவர்களைப் பிராடு, போலி என்பது போன்றும், இன்னும் பல வழிகளாலும் தனியாட்கள்மீது தாக்குதல் செய்தும், தமிழ்மணத்தின் விளம்பரப் பதிவுகள் சிலவற்றைப் பற்றி எந்த அடிப்படையும் இன்றி உள்நோக்கம் கற்பிக்கும் வண்ணம் தவறான கருத்தையும் அவதூறையும் பரப்பும் பதிவுகளையும் நீக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம். மீண்டும், குறைகளைச் சுட்டிக் காட்டுவதையோ, ஆலோசனைகள் சொல்வதையோ நாங்கள் எக்காலத்திலும் எவ்வகையிலும் எதிர்க்கவில்லை; வரவேற்கிறோம். ஆனால், காரணமற்ற அவதூறுகளை எதிர்கொள்ளவும், தொடர்விளக்கம் சொல்லவும், எங்களுக்கு விருப்பமில்லை; நேரமில்லை. சரியான புரிந்துணர்வற்ற நிலையிலே தொடர்ந்திருப்பதைவிட விலகி/விலக்கி விடுதல் நல்லது.
மேலும் எமது புதிய திட்டங்களை அவ்வப்போது இப்பதிவிலே வெளியிட்டு, உங்கள் கருத்துகளையும் கேட்டு மேற்கொண்டு எம் பணி தொடரும்.
இறுதியாக, உங்கள் அனைவரின் ஊக்கமும், ஒத்துழைப்பும் தேவை என்று கூறி டி.எம்.ஐ. இந்த கருத்துப் பரிமாற்றத்தைத் தற்போதைக்கு நிறைவு செய்கிறது. அனைவருக்கும் நன்றி!
தொடரும் தங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி.
தமிழ்மணத்தின் “இந்த வார நட்சத்திரம்” எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறது? தமிழ்மணம் நட்சத்திரம் ஆவதற்கான தகுதிகள் என்ன என்பன போன்ற கேள்விகளை பதிவர்கள் பல நேரங்களில் எழுப்பி வந்துள்ளனர்.
தமிழ்மணம் நட்சத்திரமாகத் தேர்ந்தெடுப்பதற்குத் தகுதிகள் என்று சொல்வதை விட சிலக் காரணிகளை அடிப்படையாகக் கொள்கிறோம் என்று சொல்லலாம். தகுதிகள் என இதற்கு அடைமொழியை கொடுக்க விரும்பவில்லை. காரணம் தமிழ்மணத்தில் ஆயிரக்கணக்கான பதிவர்கள் எழுதிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவருடைய எழுத்தும் ஒவ்வொரு வகையில் சிறந்தவையாக இருக்கின்றன. அவை அனைத்திற்குமான தகுதிகளை வரையறுப்பது முடியாத காரியம் மட்டும் அல்ல. அதனை செய்வது தமிழ்மணத்தின் நோக்கமும் அல்ல.
பெரும்பாலும் கீழ்க்கண்ட காரணிகளைக் கொண்டே தமிழ்மணம் நட்சத்திர வாரத்திற்கு பதிவர்களை தேர்ந்தெடுக்கிறோம். ஆனால் இவை மட்டுமே காரணி என்று வரையறுத்து விட முடியாது. அது போல கீழேயுள்ள இதே வரிசைப்படியே கணக்கில் கொள்வதில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
1.பெரும்பாலும் மிகுந்த சிரத்தை எடுத்துத் தகவல்களைத் திரட்டி எளிமையாகவும், சுவாரசியமாகவும் எழுதக் கூடியவர்களை நட்சத்திரமாக்க முயல்கிறோம்
2. நீண்டகாலமாக (பெரும்பாலும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக) தமிழில் வலைப்பதிவு எழுதுகிறவர்கள். அவர்கள் ஓரளவுக்கு நன்றாக எழுதுபவர்களாகவும், அடிக்கடி எழுதுபவர்களாகவும் இருக்க வேண்டும். தமிழ்மணத்தின் தரவுகளிலிருந்து இதைத் கண்டறிந்து அவர்களை தேர்ந்தெடுக்கிறோம்.
3. சக பதிவர்களும், வாசகர்களும் பரிந்துரைக்கும் நன்றாக எழுதும் பதிவர்களை நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கிறோம்
4. வாசகர்கள் அதிகம் விரும்பும்படி எழுதுபவர்கள். பின்னூட்டங்களில் வரும் கருத்துகளின் அடிப்படையில் இதைக் கணக்கில் கொள்கிறோம்.
5. சிறப்பான வாரங்களில், எடுத்துக்காட்டாக, உலக மகளிர் தினம் வரும் வாரத்தில் பெரும்பாலும் அறியப்பட்ட பெண் எழுத்தாளர் – பதிவரை அழைக்கிறோம்.
6.பொங்கல் வாரத்தில் ஏற்கனவே வலைப்பதிந்து வரும் சிறந்த தமிழ் எழுத்தாளரைத் தேடுகிறோம். இவர்கள் நட்சத்திர வாரத்தில் நாங்கள் வேண்டிக்கொள்கிறபடி பதிவுகள் இடாமலும் போகக் கூடிய சிக்கலுமுண்டு.
7. சில பிரிவினர்க்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டுமென்று முன்னுரிமை வழங்க நினைப்பதுமுண்டு, பெண்பதிவர்கள், ஈழத்துப் பதிவர்கள் போன்ற எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.
8.நட்சத்திர வாரம் வேலைப் பளு மிக்க வாரம் என்பதை நட்சத்திரமாக இருந்த பதிவர்கள் அறிவார்கள். தினமும் ஒரு பதிவு என ஏழு நாட்களுக்கு பதிவு எழுதவே பதிவர்களை வேண்டுகிறோம். குறைந்தது 5 இடுகைகளையாவது எழுதக்கூடியவரா என்பதை பார்க்கிறோம். அதனால் வலைப்பதிவுகளில் அடிக்கடி எழுதும் பதிவரா என்பதை முக்கியமாக கவனிக்கிறோம். சிலப் பதிவர்கள் நன்றாக எழுதக்கூடியவர்களாக இருந்தாலும் தொடர்ச்சியாக வலைப்பதிவுகளில் எழுதுவதில்லை. நட்சத்திர வாரத்தில் தொடர்ந்து எழுதுதல் முக்கியம் என்பதால் அதனை ஒரு முக்கிய காரணியாகப் பார்க்கிறோம்
நட்சத்திரங்களை தேர்தெடுப்பதில் உள்ள சவால்கள்
1.நட்சத்திர வாரங்களுக்கு முன்கூட்டியே ஒப்புதல் அளித்து விட்டு இறுதி நேரத்தில் பதிவர்கள் மறுக்கும் சூழ்நிலையில் வேறு ஒருவரை தேட வேண்டிய சூழ்நிலைகள் பலமுறை ஏற்பட்டுள்ளது.
2.நட்சத்திர வாரத்திற்கு ஒப்புக் கொண்டு பதிவுகள் எதையும் எழுதாத பதிவர்களும் உண்டு. இது போன்ற சூழ்நிலையில் மின்னஞ்சல், தொலைபேசி எண் இருந்தால் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எழுத வலியுறுத்துதல் போன்றவையும் செய்ய நேரிட்டிருக்கிறது
3.பத்தாயிரம் பதிவுகளை எட்டும் நிலையில் தன்னார்வப் பணியாக தமிழ்மணத்தை நடத்தும் சூழ்நிலையில் அனைத்துப் பதிவர்களையும் கவனித்து நட்சத்திரங்களை தேர்ந்தெடுப்பது என்பது மிகப் பெரிய சவாலாகவே இருந்து வருகிறது. இதனால் சில நேரங்களில் நன்றாக எழுதக்கூடிய பதிவர்களை நாங்கள் கவனிக்காமல் போகும் வாய்ப்புகள் உள்ளது
பதிவர்கள் எங்களுக்கு எப்படி உதவலாம்
சில நிமிடங்களே தமிழ்மணம் முகப்பில் பதிவுகள் நிற்கிற இக்காலத்தில் பத்தாயிரம் பதிவுகளில் பல அருமையான பதிவுகள் இன்னும் எங்கள் கண்ணில் சிக்காமலே இருந்திருக்கக்கூடும். இதற்கு உங்கள் அனைவருடைய உதவியும் தேவை. தொடர்ந்து அருமையாக எழுதப்படும் பதிவுகளின் முகவரியைப் பரிந்துரை செய்து நட்சத்திர நிர்வாகியின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.
To: staradmin@thamizmanam.com
Subject: நட்சத்திரப் பரிந்துரை
இவ்வாறு பரிந்துரைக்கப்படும் எல்லாப் பதிவர்களையும் நட்சத்திரமாக அழைக்க இயலாது என்பதை அறிவீர்கள். அதிகம் பேர் பரிந்துரைக்கப் படும் பதிவுகளை தமிழ்மணம் நிர்வாகக்குழுவினர் பரிசீலித்து முடிவு செய்வார்கள்.
புரிந்துணர்வுடன் கூடிய உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.
தமிழ்மணம் நட்சத்திர நிர்வாகம்
தமிழ்மணம் இயன்றவரையிலே தரமான, சொந்தமாக எழுதப்பட்ட பதிவுகளையே திரட்ட முயற்சிக்கின்றது. தமிழ்மணத்திலே சராசரி மாதாந்தம் நூற்றைம்பது பதிவுகள் இணைக்கப்படுகின்றன. இவற்றைத் தவிர, சராசரியாக முப்பது பதிவுகள் தமிழ்மணத்தின் விதிமுறைகட்கும் நோக்குகளுக்கும் பொருந்தாக்காரணங்களாலே சேர்க்கப்படாமற் தவிர்க்கவேண்டியதாகின்றது. அத்துடன் சேர்த்துக்கொள்ளப்பட்ட பதிவுகள் தொடர்ந்தும் விதிமுறைகளை மீறுவதைச் சுட்டிக்காட்டும்போதும் தொடர்ந்து மீறுகையிலே விலக்கப்படுவதும் தவிர்க்கப்படமுடியாததாகின்றது.
பதிவர்கள் ஏற்கனவே அறிந்தபடி, தமிழ்மணத்திலே சேர்க்கப்படும் பதிவுகளுக்கு அடிப்படையிலே சில விதிகளை வைத்திருக்கின்றோம்.
1. பதிவுகள் தமிழிலே எழுதப்பட்டிருக்கவேண்டும்; தமிழ்மணத்திலே சேர்க்கப்படுவதற்குக் குறைந்தளவு மூன்று இடுகைகளேனும் பதிவு கொண்டிருக்கவேண்டும்.
2. முழுக்கவே சாதிச்சங்கங்கள், அரசியற்கட்சிகள், நிறுவனப்பட்ட மதங்கள், சோதிடம் இவற்றுக்காகவே சார்ந்த பதிவுகள் சேர்த்துக்கொள்ளப்படமாட்டா; ஏற்கனவே சேர்க்கப்பட்டிருக்கும் பதிவுகள், இப்படியான கருக்களை மையப்படுத்தி வெளிவரும்போது, சாதி, கட்சிப்பதிவுகள் சுட்டிக்காட்டலோடு, முற்றாக விலக்கப்படுகின்றன; மதம் சார்ந்த பதிவுகள் ‘வணிகப்பதிவுகள்’ பிரிவுக்குள்ளே சேர்க்க ஊக்குவிக்கப்படுகின்றன. பொருளீட்டுதல் சாராத கல்விநிறுவன, தொண்டுநிறுவனப்பதிவுகள்மட்டும் இப்படியான வகைப்படுத்தலிலிருந்து விலக்கானவை.
3. பொருளீட்டுதலை முதன்மை நோக்கமாகக் கொண்ட வணிகப்பதிவுகள், பணம் கட்டும் பதிவுகளாக ஆகும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றன.
4. திரைப்படப்பதிவுகள், வணிகப்பதிவுகள் அல்லாதவிடத்து, தமிழ்மணத்தின் திரைப்படங்கள் சார்ந்த பதிவுகளைமட்டும் திரட்டும் “திரைமணம்” திரட்டியிலே சேர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு, தமிழ்மணத்திலே சேர்க்கப்படாமல் தவிர்க்கப்படுகின்றன.
5. பிற தளங்கள், பதிப்புகளிலிருந்து “ஒத்தி ஒட்டும்” பதிவுகள் இயன்றவரை தவிர்க்கப்படுகின்றன. தமிழ்ப்பதிவர்கள், தமிழிலே எழுதுவதை ஊக்குவிக்கும்வகையிலேமட்டுமே தமிழ்மணம் ஆரம்பிக்கப்பட்டது. அதனாலே, உரிமை பெற்றோ பெறாமலோ வெட்டி ஒட்டும் பதிவுகளைத் தவிர்க்கவே விரும்புகின்றோம். கலை, சமூகத்தேவை கருதிய அறிவிப்புகளும் அறிக்கைகளும் இவ்வகைப்படுத்தலுக்கு அப்பாலானவை.
6. எல்லைமீறும் இடுகைகள், தனிப்பட்ட தாக்குதல்கள் உள்ளடக்கிய இடுகைகள் அழுத்தமான ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டப்படும்போது, அப்படியான இடுகைகளும் தொடரும் பதிவுகளும் தமிழ்மணத்திலிருந்து விலக்கப்படும். ஆனால், பூடகமான இடுகைகளுக்கெல்லாம் அர்த்தம் கண்டு விலக்கத் தமிழ்மணத்துக்கு இயலாதெனப் பதிவர்கள் அறிவார்களென நம்புகிறோம். மேலும், தமிழ்மணம் பதிவர்களின் தனிப்பட்ட பிணக்குகளுக்குத் தீர்ப்புச்சொல்லும் முறையீட்டு, நீதிவழங்குநிலையமில்லை என்பதைப் பதிவர்கள் உணர்வார்களென நம்புகிறோம்.
7. நகைச்சுவைப்பதிவுகள் வரவேற்கப்படுகின்றன; ஆனால், பரபரப்பான தலைப்புகளிலே “சூடாக விழையும்” கும்மிப்பதிவுகளையும் இயன்றவரை முன்னறிவித்தல்களோடு காலத்துக்குக் காலம் தமிழ்மணம் விலக்கி வைத்து, காத்திரமான பதிவுகள் தமிழ்மணம் முன்றலிலே தோன்ற முயற்சிக்கின்றோம்.
தமிழ்மணத்திலிருந்து பதிவுகளை தனிப்பட்ட காரணங்களுக்காக விலக்கிக்கொள்ளவிரும்புகின்றவர்கள் தனிப்பட்ட தமிழ்மணம் நிர்வாகிகளின் முகவரிக்கு அறியத்தாருங்கள். தமிழ்மணத்திலிருந்து விலக்கப்பட்ட பதிவுகள் விலக்கப்பட்ட காரணப்பிழைகள் களையப்படுமிடத்து, பதிவர் விண்ணப்பிக்குமிடத்திலே மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படும்.
ஒரு பதிவரின் வெவ்வேறு உள்ளடக்கங்கள் உள்ள பதிவுகளைச் சேர்ப்பதிலே எதுவிதமான சிக்கலுமில்லை. ஆனால், ஒரே பதிவினை வெவ்வேறு தளங்களிலே ஏற்றித் தமிழ்மணத்திலே சேர்க்க முயற்சிக்கும்போது, ஒரு பதிவினைமட்டுமே சேர்க்கலாம்.
தமிழ்மணம், தன்னார்வ அடிப்படையிலே நிர்வகிக்கப்பட்டுவருவதாகும். அதனாலே, பதிவுகளைச் சேர்ப்பதற்கும், சேர்க்கப்பட்ட பதிவுகள் பற்றிய முறையீடுகளுக்குப் பதிலளிப்பதற்கும் உடனடியே நிர்வாகிகளுக்கு இயலாமலிருக்கும். அதனாலே, குறைந்தளவு இரு நாட்கள் அவகாசமேனும் தரும்படி பதிவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் சேர்ப்பதும் விலக்குவதும் தொடர்பான உங்கள் வினாக்களை ஈங்கிட்டால், முடிந்தவரை பதிலளிக்கமுயற்சி செய்வோம்.
ரவிசங்கர்
கேள்வி : Recent times when I try to post after typing my username and password the next screen says” புது இடுகை
எதுவும் காணப்படவில்லை” two times I tried and the same message came but post has not been appeared in tamilmanam. But it appears after some time. Some time it get posted if I post one more post after five minutes.Both posts
appears.
பதில் : தமிழ்மணம் தொடர்ச்சியாக தானியங்கியாக பதிவுகளை திரட்டிக் கொண்டிருக்கிறது. சில நிமிடங்களுக்கு ஒரு முறை இந்த திரட்டுதல் நடந்து கொண்டே இருக்கிறது. இதனால் சில நேரங்களில் பதிவுகள் Cache என்று சொல்லப்படுகிற சேமிப்பானில் இருக்கும். அவ்வாறான நேரங்களில் நீங்கள் குறிப்பிடும் பிரச்சனை வரும் வாய்ப்புள்ளதை கண்டறிந்தோம். உங்களுடைய கேள்விக்கு மிக்க நன்றி. தற்பொழுது இந்த வழு(Bug) களையப்பட்டிருக்கிறது
டோண்டு ராகவன்
கேள்வி :சில பதிவர்கள் தமது மென்பொருள் அறிவை தவறாகப் பயன்படுத்தி, தமது இடுகைகள் மட்டும் பல நாட்களாகத் தொடர்ந்து தமிழ்மண முதல் பக்கத்தில் வருமாறு செய்து விடுகிறார்கள்
பதில் : நீங்கள் குறிப்பிடும் பதிவுகள் தமிழ்மணம் முகப்பில் தொடர்ந்து இருக்க விளம்பரம் செய்யப்பட்ட பதிவுகள். தமிழ்மணத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்தில் எழுதப்பட்ட இடுகைகள் மட்டுமே தமிழ்மணம் முகப்பில் தெரியும். அதனை யாரும் தவறாக பயன்படுத்துவதாக தெரியவில்லை
ஜோதிஜி
கேள்வி :ஓட்டுப்பட்டை என்பது அவசியமா? உறுப்பினராக இருப்பவர்கள் பதிவை வெளியிட்டதும் இயல்பாகவே இணைத்துக் கொள்ளும் வசதியை உருவாக்கினால் என்ன?
பதில் : ஒட்டுப்பட்டை (அ) பதிவுப்பட்டை என்பது அவசியமானது அல்ல. பதிவுப்பட்டையை இணைப்பது பதிவர்களின் தனிப்பட்ட விருப்பத்தை சார்ந்தது. அதனை தமிழ்மணம் வலியுறுத்துவது இல்லை. அதே நேரத்தில் சில வசதிகள் பதிவுப்பட்டை மூலமே சாத்தியமாகிறது – குறிப்பாக வாசகர் பரிந்துரை வாக்குகள், மறுமொழிகளை திரட்டுதல் போன்றவை ஒட்டுப்பட்டை (அ) பதிவுப்பட்டை மூலமே சாத்தியமாகிறது. பதிவுப்பட்டையை இணைக்காவிட்டாலும் பதிவுகளை தமிழ்மணம் தானியங்கியாக திரட்டும்.
செல்வராஜ நிரூபன்
கேள்வி :என்னிடம் சிறிய ஒரு கேள்வி இருக்கின்றது. சில நேரங்களில் தமிழ்மண முகப்பு பக்கத்தில் வெளிவருகின்ற பதிவுகளிற்கு அண்மையாக உள்ள யெலோ (Yellow) பட்டன் மூலம் ரிப்போர் செய்து, தனி மனிதத் தாக்குதலோ அல்லது ஆபாச விடயங்களோ இல்லாத பதிவுகளையும் விஷமத் தனமாக திட்டமிட்டு தமிழ் மணத்திற்கு ரிப்போர்ட் செய்து பலர் நீக்கச் செய்கின்றார்கள். இவ்வாறு பதிவர்களால் ரிப்போர்ட் செய்யப்படும் பதிவுகளும் தானியங்கி முறையில் தான் நீக்கப்படுகின்றனவா அல்லது தமிழ்மண நிர்வாகிகளின் பார்வைக்கு உட்படுத்தப்பட்டு நீக்கப்படுகின்றனவா? இதே வேளை ஒரு பதிவர் தனது தனிப்பட்ட ஐபி முகவரியிலிருந்து ரிப்போர்ட் செய்திருக்கிறாரா? அல்லது பல பதிவர்களின் வெவ்வேறு ஐபி முகவரியிலிருந்து புகார் செய்திருக்கிறார்களா? எனும் தொழில் நுட்பத் தகவல்களைத் தமிழ் மணம் பரிசோதித்தா இவ்வாறு ரிப்போர்ட் செய்யப்படும் பதிவுகளை நீக்குகின்றது?
பதில் : தமிழ்மணத்தில் ஒரு பதிவோ, இடுகையோ எதன் அடிப்படையில் நீக்கப்படுகிறது என்பது குறித்த விபரங்களை இந்தப் பதிவில் எழுதியிருக்கிறோம் (தமிழ்மணம் – பதிவுகளைச் சேர்த்தலும் விலக்கலும்). ஆனால் இது தானியங்கியாக செய்யப்படுவதில்லை. புகார் வழங்குபவர்கள் ஐபி விபரங்களை தமிழ்மணம் சேகரிப்பதில்லை. ஒரு புகார் முன்வைக்கப்படுகிறது என்பதாலேயே ஒரு பதிவோ, இடுகையோ நீக்கப்படுவதும் இல்லை. தகுந்த பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு தமிழ்மணம் சேர்க்கை விதிகளை மீறியிருந்தால் மட்டுமே ஒரு பதிவோ, இடுகையோ விலக்கப்படுகிறது.
முனைவர் இரா.குணசீலன்
கேள்வி :“தாங்கள் அளிக்கும் குறிச்சொற்களில் “இலக்கியம்“ என்னும் பிரிவும் இருந்தால் இலக்கியப் பதிவுகள் அதிகரிக்கத் துணையாக இருக்கும் எனக் கருதுகிறேன்..
பதில் : ஆலோசனைக்கு நன்றி. இதனை நிச்சயம் செய்கிறோம்
YOGA.S
கேள்வி :வார நட்சத்திரம் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறது?தரப்படுத்தலில் பாகுபாடு காண்பிக்கப்படுவதில்லையா?அதிக பின்னூட்டம்(கருத்து)பெறுவோர் முன்னணிக்கு வந்து விட முடியுமா?பின்னூட்டமிடுவோர் கண்டிப்பாகப் பதிவராகத் தான் இருக்க வேண்டுமா?அப்போது தான் முகப்பில் இடம்பிடிக்கலாமா?(நான் பதிவரல்ல)
பதில் : நட்சத்திரங்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது குறித்த விபரங்களை தனி இடுகையில் முன்வைக்க இருக்கிறோம். அப்பொழுது இது குறித்து விரிவாக எழுதுகிறோம்
கோவி.கண்ணன்
கேள்வி :‘மகளிர்மணம்’ எப்போது செயல்பாட்டுக்கு வரும் ? தமிழ்மணம் விவாதக் களங்களை (Forum) உருவாக்கி ஆக்கமான விவாதங்களுக்கு வழி செய்யலாமே
பதில் : உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி. நல்ல யோசனை. இதனை பரிசீலனை செய்கிறோம்.
கேள்விகளை எழுப்பிய அனைவருக்கும் நன்றி. மேலும் கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக இருக்கிறோம்
தமிழ்மணம் தொழில்நுட்பக் குழு
தமிழ்மணம் போன்றதொரு தளத்தினைப் பயன்படுத்த ஆரம்ப காலத்தில் இருந்தே நுட்ப உதவிக்கென்று ஒரு வழிமுறை இருப்பது அவசியமாக இருந்தது. இதற்குக் காரணங்கள் பல.
ஒன்று, வலைப்பதிவுகளின் ஆரம்ப காலத்தில் பெரும்பாலும் கணினி, மென்பொருள், மற்றும் பொறியியற் துறைகளைச் சார்ந்தவர்களே அதிகம் இருந்தனர் என்றாலும், நாளடைவில் இணைய வளர்ச்சியின் பரவலாலும், இணையத்தில் தமிழ்ப் பயன்பாடு வளர்ந்தமையாலும், வலைப்பதிவுகளும் இன்ன பிற இணைய வசதிகளும் பலதரப்பட்ட பயனர்களையும் சென்றடைந்தது. ஆனால், எல்லோருடைய பின்புலமும் வெவ்வேறானதாக இருந்தமையால் அவர்களுக்குத் தேவைப்பட்ட நுட்ப விளக்கங்களும் வேறு வேறு விதமான அளவில் இருந்தன. இன்றும் இருக்கின்றன.
காட்டு: “செய்தியோடை” என்றால் என்ன? என்னும் கேள்விகள் கூட இன்னும் வந்துகொண்டிருக்கும் நிலையில் இது இயல்பானதொன்றே என்று எடுத்துக் கொள்கிறோம். இதற்கெனவே வலைப்பதிவு நுட்பங்களின் அடிப்படை மற்றும் தமிழ்மணம் திரட்டியில் இணைந்து கொள்வது போன்ற அடிப்படை விளக்கங்களுக்குச் சில பக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறோம். இவை எல்லோருக்கும் தேவையானவை அல்ல. ஆனால், இன்னும் இவற்றிற்கான தேவை இருக்கிறது.
இரண்டு, இணையமும், நுட்பங்களும் அதிவேகமாக மாறி வரும் வேளையில் இயன்றவரை அவற்றைத் தமிழ்மணத்தில் சேர்க்க முயல்கிறோம். சிலவற்றைச் சேர்த்தும் பிறவற்றை விலக்கியும் மாற்றங்களை எப்போதும் கொண்டிருப்பதால் சிலசமயம் அவற்றைத் தெளிவு செய்துகொள்வதற்கான தேவையும் பயனர்களுக்கும் இருக்கிறது.
காட்டாக, செய்தியோடைகளை அடிப்படையாக வைத்தே திரட்டி நுட்பம் இயங்குகிறது என்பது பலரும் இன்று அறிந்த ஒன்றே. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னர், முக்கியமான வலைப்பதிவுச் சேவையான பிளாக்கர், தனது இயல்பான செய்தியோடை முகவரியை மாற்றியது. http://dharumi.blogspot.com/atom.xml என்பது போல இருந்தவை http://tamilamudam.blogspot.com/feeds/posts/default என்பது போன்ற வடிவத்திற்கு மாறியது (மேற்சுட்டிய தளங்கள் தற்செயலானவை). அதோடு, பழைய பிளாக்கர், புதிய பிளாக்கர் என்று இரண்டும் சிறிது நாட்களுக்கு ஒருசேர இயங்கியது. சிக்கல் என்னவென்றால் தமிழ்மணத்தின் பல வசதிகளை வழங்கிவந்த கருவிப்பட்டை நிரல் முற்றிலுமாக மாற்றியமைக்கப் படவேண்டியிருந்த்து. இதனைச் செய்ய வழிமுறைகளை அறிவித்தாலும், ஆரம்பத்தில் அது சற்றே சிக்கலுக்குரியதாக இருந்த்து. இதையே பின்னாளில் எளிதாகச் சேர்த்துக் கொள்ளும் நுட்பத்தைச் சில பதிவர்களே செய்துதவினர். (இப்படியான கருவிப்பட்டையே இன்றைய நாளில் தேவை தானா என்னும் கேள்வியும் பதிவர்கள் இடையேவும் தமிழ்மண நிர்வாகத்திலும் எழுந்திருக்கிறது. அது வேறு கேள்வி. அதனைப் பின்னர் பார்ப்போம்).
இதுவே, அண்மையில் பிளாக்கர் ஃபீட்பர்னர் ஓடையையும் பாவிக்கத் தொடங்கியதில் இருந்து, ஃபீட்பர்னருக்கு இயல்பான ஓடையை வழிமாற்றிவிடுவதால் திரட்டிக்குச் சிக்கல் ஏற்படுகிறது என்பதைப் பலருக்கும் விளக்க வேண்டியிருக்கிறது. ஃபீட்பர்னர் ஓடையைக் கூடுதலாக வைத்துக் கொள்வது பிரச்சினையில்லை. ஆனால் இயல்பாய் உள்ள ஓடையை வழிமாற்றுவதில் சிக்கல்கள் உள்ளன. இவற்றை எல்லாம் முற்றிலும் அறிந்துணர தமிழ்மணம் நிர்வாக்க் குழுவிலும் சிலரேனும் நிறைய நேரம் செலவிட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. எல்லா நுட்பங்களையும் எல்லாச் சமயங்களிலும் தெளிவாக விளக்கிச் சொல்ல இயலாத நேரங்களில் சிலசமயம் பதிவர்கள் உதவுகின்றனர். இந்த பீட்பர்னர் பிரச்சினை குறித்து நுட்ப உதவி கேட்டு வரும் மடல்களுக்குக் கீழ்க்கண்ட பரிந்துரையை அனுப்புகிறோம்.
1. Remove redirection to feedburner feeds. OR
2. See: http://tvs50.blogspot.com/2009/06/feedburner-rss-feeds-vs-tamilmanam.html
Also See: http://ethirneechal.blogspot.com/2010/12/tamilmanam.html
மூன்று, சிலசமயங்களில் சில காரணங்களால் சில வசதிகள் அறிவித்தது போல் வேலை செய்யாது போகலாம். அதற்கும் பல காரணங்கள் உண்டு. தற்காலிகமாக வழங்கியின் பளு அதிகமாகித் தளம் தொய்வடைவதுண்டு. இதனைச் சரிசெய்ய நாளடைவில் மேலும் அதிகச் சக்தி வாய்ந்த வழங்கிகளுக்கு மாறிக் கொண்டே வந்திருக்கிறோம்.
அடுத்து, தமிழ்மணம் நிரலில் சிலசமயம் பிழை ஏதும் இருக்கவும் வாய்ப்புண்டு. அவற்றில் சிலவற்றை எளிதாகத் தீர்த்து விடுவதுண்டு. சிலவற்றைச் சரிசெய்வது எளிது தான் என்றாலும் நேரம் இன்மையால் விட்டுவிடுவதுண்டு. இது போன்றவற்றிற்கும் வழிமாற்று முறைகளையும் பிற விளக்கங்களையும் நுட்ப உதவிக்குழுவிற்கு வரும் மடல்களின் வாயிலாகச் செய்து வருகிறோம்.
இயன்றவரை உதவிக்குழுவிற்கு வரும் ஒவ்வொரு மடலுக்கும் பதில் அனுப்ப முயல்கிறோம். சில சமயம் தாமதம் ஆகிவிடுவதுண்டு என்றாலும், அநேகமாக 99% மடல்களுக்குப் பதில் அனுப்பி விடுகிறோம் என்பதையே ஒரு சாதனையாகக் கருதுகிறோம். இதிலும் வேடிக்கையும் வேதனையுமான சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. அவை பற்றிப் பிறகு.
தமிழ்மணம் இணைத்தளம் தமிழின் முதல் இணையத்திரட்டியாக 2004ல் தொடங்கப்பட்டது. 2006ல் இருந்து தமிழ்மணத்தை தமிழ் மீடியா இண்டர்நேசனல் நிறுவனம் நடத்தி வருகிறது. தமிழ்மணத்தினை தொடர்ந்து தமிழின் முதன்மையான இணையத்திரட்டியாக தக்கவைப்பதற்கு தமிழ் மீடியா இண்டர்நேசனல் நிறுவனம் தன்னாலான
முயற்சிகளை தொடர்ந்து செய்து வந்திருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ்மணத்தின் தொழில்நுட்பத்தில் பல்வேறு புதிய சேவைகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வந்திருக்கிறோம். தமிழ் வலைப்பதிவுகளுக்கு வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவுக்கு பல்வேறு வசதிகளை தமிழ்மணம் வழங்கி வருகிறது. அதே நேரத்தில் தமிழ்மணத்தின் சேவையை இதை விட இன்னும் மேம்படுத்தி கொடுக்க இயலும். தமிழ்மணத்திலேயே இன்னும் பல தொழில்நுட்ப குறைகள் இருக்கத்தான் செய்கின்றன என்பதை நாங்கள் உணர்ந்தும் இருக்கிறோம். என்றாலும் லாப நோக்கு இல்லாத தன்னார்வ நிறுவனமாக தமிழார்வளர்களின் பகுதி நேரப் பணியில் செயல்படும் தமிழ்மணம் எதிர்கொண்ட/எதிர்கொண்டு வருகின்ற சவால்களும் ஏராளம். இந்த சவால்களுக்கு மத்தியில் தான் எங்களால் வழங்க முடிந்த புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறோம்.
இந்த நட்சத்திர வாரத்தில் தமிழ்மணம் சார்ந்த பல்வேறு விடயங்களை முன்வைக்க இருக்கிறோம். அதன் ஒரு பகுதியாக இந்த இடுகையில் தமிழ்மணம் செயல்படும் தொழில்நுட்பம் குறித்து ஒரு சுருக்கமான அறிமுகத்தை வழங்குகிறோம். இதன் மூலம் தமிழ்மணம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ள இயலும்.
தமிழ்மணம் நிர்வாகத்திற்கு வருகின்ற பலக் கேள்விகள் தமிழ்மணத்தின் சூடான இடுகைகள், தமிழின் முன்னணி இடுகைகள் போன்ற சேவைகள் தமிழ்மண நிர்வாகத்தால் தேர்ந்தெடுக்கப்படுவதாக பலர் நினைப்பதை எங்களுக்கு தெரிவிக்கிறது. தமிழ்மணத்தின் அனைத்து சேவைகளும் தானியங்கியாகவே செயல்படுகின்றன. தமிழ்மணத்தின் எந்தச் சேவையிலும் மனிதத் தலையீடு இருப்பதில்லை. பதிவுகளை திரட்டுதல் தொடங்கி தமிழின் முன்னணி இடுகைகளை பட்டியலிடுவது வரை அனைத்தையுமே தமிழ்மணம் தானியங்கியாக தான் வழங்குகிறது.
இன்று பதிவுகளின் எண்ணிக்கை பத்தாயிரத்தை எட்டும் நிலையிலும் தமிழ்மணம் பதிவுகளை தானியங்கியாக திரட்டுகிறது. தமிழ்மணம் திரட்டி தினமும் பல ஆயிரம் பதிவுகளின் செய்தியோடைகளை திரட்டி அதில் இருந்து சமீபத்தில் எழுதப்பட்ட இடுகைகளை தமிழ்மணத்தின் முன் பக்கத்திற்கு கொண்டு வருகிறது. ஒரு நாளில்
தமிழ்மணத்தில் தற்பொழுது 500 இடுகைகள் எழுதப்படுகின்றன. இந்த 500 இடுகைகளை அவற்றின் குறிச்சொல் கொண்டு இசை, நகைச்சுவை, சினிமா, அரசியல் என தமிழ்மணம் திரட்டி பல்வேறு பிரிவுகளில் வகைப்படுத்துகிறது. அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு இடுகையும் பெறும் மறுமொழிகளின் எண்ணிக்கை தமிழ்மணம்
முகப்பில் தொகுக்கப்படுகிறது. அது தவிர மறுமொழித் திரட்டி மூலம் அனைத்து மறுமொழிகளையும் வாசிக்க முடியும். மறுமொழித் திரட்டி தமிழ்மணத்தின் முக்கிய சேவையாக இருந்து வருகிறது. பதிவுகளை திரட்டுவதை விட மறுமொழிகளை திரட்டுவது சவால் நிறைந்தது. தமிழ்மணம் வழங்கிக்கு அழுத்தம் கொடுக்ககூடிய இந்தச் சேவையை தமிழ்மணம் தொடர்ந்து வழங்கி வருகிறது. தமிழ்மணம் வழங்கிக்கு பாதிப்பு ஏற்படாதவண்ணம் இந்த தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது.
செய்தியோடைகள்
தமிழ்மணம் செய்தியோடைகளை (RSS Feed) அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. செய்தியோடையில் செய்யப்படும் எந்த வகை மாற்றமும் தமிழ்மணம் பதிவுகளை திரட்டுவதை பாதிக்கும். பல நேரங்களில் பலப் பதிவர்கள் தங்களுடைய பதிவுகள் திரட்டப்படுவதில்லை என்ற குறைகளை முன்வைக்கிற பொழுது அது பெரும்பாலும் அவர்களின் செய்தியோடை சார்ந்த பிரச்சனையாகவே இருக்கிறது. செய்தியோடை மாற்றங்களில் எப்பொழுதும் பதிவர்கள் கவனம் கொள்ள வேண்டும்.
தமிழ்மணம் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு மாறுபட்ட எண்ணங்கள் பதிவர்கள் மத்தியில் இருந்து வருகிறது. நட்சத்திர வாரத்தில் இடுகைகளை வெளியிடுவதோடு நின்று விடாமல் தமிழ்மணத்தின் தொழில்நுட்பம் குறித்த உங்கள் கேள்விகளுக்கு நாங்கள் விடையளிக்க விரும்புகிறோம். இந்த இடுகையின் மறுமொழியில் உங்கள் கேள்விகளை கேட்கலாம். பதில்களை மறுமொழியிலோ, மற்றொரு இடுகையிலோ அளிக்க தயாராக இருக்கிறோம்.
கேள்விகளை கேளுங்கள்…
தமிழ்மணம் தொழில்நுட்பக் குழு
தமிழ் மீடியா இண்டர்நேசனல் நிறுவனம்
இந்த வாரம் தமிழ் மண நட்சத்திரம் யார் என்று ஆவலுடன் படிக்க வந்திருக்கும் உங்களுக்கு டி.எம்.ஐ நிறுவனமே அந்த இடத்தை எடுத்துக் கொண்டது வியப்பாக இருக்கலாம். தமிழ்மணம் வலைத்திரட்டியைத் திரு. காசி ஆறுமுகத்திடம் இருந்து பெற்று மேலும் பல புதிய வலைப்பதிவு சேவைகளை அளிப்பதற்காக தமிழ் மீடியா இண்டர்நேசனல் நிறுவனம் நிறுவப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைகின்றன. வணிகநோக்கற்ற தன்னார்வத் தொண்டுநிறுவனமாக அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள டி.எம்.ஐ நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்து வந்துள்ளவற்றையும், எதிர்கொண்ட சவால்களையும் இவ்வார நட்சத்திரப் பதிவுகளில் ஒரு மீள்பார்வை செய்யவிருக்கிறோம். இந்த நட்சத்திர வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பதிவர்களுடனான நேரடியாக உறவைப் பேணும் விதமாக இவ்வாரம் தன் நோக்கங்களையும் பணிகளையும் எதிர்காலத்திட்டங்களையும் பகிர்ந்து கொள்கிறது. பதிவர்களும், வாசகர்களும் எங்களுடன் இணைந்து தமிழ்மணத்தை மேலும் சிறப்புற ஆலோசனைகளையும் வழங்க வேண்டுகிறோம்.
மேலோட்டமாக பார்ப்போமாயின், இந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்வலைப்பதிவுகளின் எண்ணிக்கையுடன் தொழில்நுட்பரீதியிலும் தமிழ்மணம் பெரும் வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. அவை பற்றிய விளக்கமான தகவல்கள் அடுத்து வரும் பதிவுகளில் வெளிவரும். தமிழ்மணத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட புதிய சேவைகளைப் பற்றி சுருக்கமாக இங்கே காணலாம்.
முதலில் நோக்கமும் குறிக்கோளும் – தமிழ் மீடியா இண்டர்நேசனல் நிறுவனம், அனைத்துத் தரப்புத் தமிழர்களும் சந்தித்து வரும் பொருளாதார, சமூக-அரசியல், கல்வி மற்றும் சுகாதாரப் பிரச்னைகள் குறித்த அறிவையும், விழிப்புணர்வையும் உலகளாவியத் தமிழ் மக்களிடம் வளர்க்க விரும்புகிறது. அரசு, வணிக நிறுவனங்கள் மற்றும் தன்னார்வக் குழுக்கள் என பல்வேறு அமைப்புகள் இப்பிரச்னைகளில் பெரும்பாலானவற்றை தனித்தனியே அணுகி வந்திருந்தாலும் இவ்வமைப்புகளுக்கும், மக்களுக்குமிடையே முழுமையான தொடர்பு இருக்கவில்லை. இந்தத் தொடர்பறுந்த நிலையானது நம் சமூகத்தின் அடிப்படையில் உள்ள பின்வரும் இரண்டு இடைவெளிகளின் பிரதிபலிப்பேயாகும்: (அ) வசதிகள் வாய்க்கப் பெற்ற பிரிவினருக்கோ விளிம்புநிலை மனிதர்களின் பிரச்னைகளைப் பற்றிய முழுமையான அறிவில்லை. (ஆ) விளிம்புநிலை மனிதர்களுக்கோ தங்களுடைய பிரச்னைகளின் அடிப்படைக் காரணங்களைப் புரிந்து கொள்ளக் கூடிய கல்வியறிவோ, விழிப்புணர்வோ அல்லது இரண்டுமே இருக்கவில்லை. அப்படியே புரிந்து கொண்டாலும், அப்பிரச்னைகளைக் களைவதற்கான வழிகளை அறிய வாய்ப்பில்லை. டி.எம்.ஐ நிறுவனம் இந்த இடைவெளிகளை நிரப்பும் பாலமாகச் செயல்பட விரும்புகிறது. விளிம்புநிலை மனிதர்கள் கூட தங்கள் குரலை சுதந்திரமாகவும், அதே நேரம் தனிமனித தாக்குதல்களின்றியும் ஒலிக்கும் வண்ணம் இணைய வசதிகளைப் பயன்படுத்தி ஒரு தளத்தை உருவாக்க விரும்புகிறது.
டி.எம்.ஐ. நிறுவனம் தமிழ்மணத்தை ஏற்கும்போது ஏறத்தாழ நானூறு பதிவுகளே இருந்தன; ஆனால், இன்றோ தமிழ்மணத்தில் இணைந்த பதிவுகளின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தொடவிருக்கிறது. பத்தாயிரம் பதிவுகளை தினமும் தானியங்கியாக தமிழ்மணம் திரட்டுகிறது. பதிவுகளை மட்டுமில்லாமல் அந்தப் பதிவுகளின் மறுமொழிகள், குறிச்சொற்கள், குறிச்சொற்களைக் கொண்டு தானியங்கியாக பதிவுகளை நகைச்சுவை, தொழில்நுட்பம் என பலப் பரிவுகளாக வகைப்படுத்தும் சேவை, பதிவுகள் வாசகர்களிடம் பெற்றுள்ள பரப்பினை தெரிவிக்கும் “தமிழின் முன்னணி பதிவுகள்”, ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டில் பிரபலமாக உள்ள பதிவுகள் என பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை தமிழ் வலைப்பதிவுகளைச் சார்ந்து தமிழ்மனம் வழங்கி வருகிறது. தமிழில் மட்டுமில்லாமல் பிற தெற்காசிய பிராந்திய மொழிகளில் கூட இல்லாத பல சேவைகளை தமிழ்மணம் வழங்க தமிழ் மீடியா இண்டர்நேசனல் நிறுவனம் உழைத்துள்ளது.
தொழில்நுட்பம் தவிர, டி.எம்.ஐ. நிறுவனத்தின் மற்றொரு முயற்சியான பூங்கா வலையிதழைக் குறிப்பிட வேண்டும். தமிழ்மணத்தில் திரட்டப்படும் வலைப்பதிவுகளில் இருந்து புதிய பார்வைகளையும் பரந்துபட்ட சிந்தனைகளையும் உயிர்ப்பான மொழியிலே வெளிப்படுத்தும் படைப்புகளை அனுமதி பெற்றுத் தேர்ந்தெடுத்து வாரந்தோறும் தொகுப்பது பயனானதெனக் கருதி, “பூங்கா” வலையிதழைத் தமிழ்மணம் செப்டம்பர் 2006 இலே ஆரம்பித்தது. இக்கவனிப்பினூடாக தமிழ்ப்பதிவர்களின் பல்வேறு துறை நிபுணத்துவத்தை அடையாளங் கண்டு பதிவு செய்யத்தூண்டவும் மொழிவெளிப்பாட்டின் பல்வேறு கலைப்பரிமாணங்களைப் பரிசோதனை செய்ய ஊக்குவிக்கவும் சமூக அக்கறையுள்ளவர்களை ஒன்றிணைக்கவும் வேண்டிய தொடர்ச்சியான தேவையை நிறைவேற்றலாமென டி.எம்.ஐ. திடமாக நம்பியது; இன்னமும் நம்புகிறது. ஆனால், கிட்டத்தட்ட ஓராண்டு காலம் வெளிவந்த பூங்கா, தமிழ்மணம் போலத் தானியங்காமல் தனித்து ஓர் ஆசிரியர்குழுவின் கீழே இயங்க வேண்டியிருந்ததால் எங்கள் குழுவினரின் நேரத்தை அதிகம் எடுத்துக் கொள்ள நிறுத்தப்படவேண்டியதாயிற்று. இருப்பினும் இன்றும் பல பதிவர்கள் அம்முயற்சியை நினைத்துப்பார்க்கும்படியாக அமைந்தது பூங்கா என்பதில் மாறுபட்ட கருத்திருக்க முடியாது.
அடுத்து, ஜனவரி 2008 ஆம் ஆண்டு புதிய தமிழ்மணம் 2.0 சிறப்பான முறையில் வெளியிடப்பட்டது. தொடக்கத்தில் புதிய தமிழ்மணத்தின் இடைமுகம் பரிச்சயமின்மையால் முழு வரவேற்பைப் பெறாவிடினும், பழக ஆரம்பித்த சில நாட்களிலேயே அதனுடைய தொழில்நுட்ப மேம்பாட்டினால் பதிவர்களின் ஆதரவைப் பெற ஆரம்பித்தது. புதிய தமிழ்மணம் அளித்த தொழில்நுட்ப வசதிகள் ஏராளம். மறுமொழி திரட்டி, குறிச்சொல் திரட்டி, வாசகர் பரிந்துரை, சூடான இடுகைகள், தனித்தனியேயான துறைசார் பதிவுப்பக்கங்கள், பதிவர்களின் படங்கள் திரட்டல் என பல சேவைகளைக் குறிப்பிட விரும்புகிறோம்.
தமிழ்மணத்தின் இன்னொரு மைல் கல் திரைமணம். திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட பதிவுகள் வாசகர்களின் மத்தியில் அதிக கவனத்தைப் பெறுதலால், புதிய திரைப்படங்கள் வெளிவரும் வேளைகளில் எல்லாம் புதிய சவாலையும் ஏற்படுத்தியது. திரைப்படப் பதிவுகள் அதிகம் வரும் பொழுது மற்ற பதிவுகள் தமிழ்மணம் முகப்பில் அதிக நேரம் நிற்காமையால் பிற துறைகளில் நன்றாக எழுதும் பதிவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. மேலும் திரைப்படங்களைப் பற்றி படிக்க விரும்பும் வாசகர்களுக்கும் புதிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நினைத்தோம். அதில் உருவாகியதுதான் திரைமணம். இன்று திரைமணம் பதிவர்களிடையேயும் வாசகர்களிடையேயும் பெரிதும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இறுதியாக, தமிழ்மணம் விருதுகளைக் குறிப்பிட விரும்புகிறோம். பொதுவாகவே வலைப்பதிவு விருதுகள் வழங்குவதில் உள்ள சவால்களையும், குளறுபடிகளையும் எதிர்கொள்ளமுடியாமல் பிறமொழிகளிலெல்லாம் விருதுகள் நிறுத்தப் பட்டிருக்கின்றன. ஆனால், தமிழ்மணம் விருதுகள் செயற்பாடு பல்வழிகளில் ஆராயப்பட்டு தனிநபர் தலையீடு மற்றும் குறைபாடுகள் ஏதுமில்லாமல் கடந்த மூன்றாண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் சுட்டிக்காட்டப்படும் சிறுகுறைகளைக்கூட பின்வரும் ஆண்டிலே பதிவர்களுடைய உதவியுடன் நீக்குகிறோம்.
இருப்பினும், இவையனைத்தையும் விட தமிழ்மணத்தின் வெற்றி வலைப்பதிவர்களாகிய உங்களது தொடர்ந்த ஆதரவில்தான் இருக்கிறது. சில நேரங்களில் எங்களுடைய சேவையில் தொய்வு ஏற்படும்போதுகூட குறைகளைச் சுட்டிக்காட்டி தொடர்ந்து எங்களுக்கு பக்கபலமாக இருந்திருக்கிறீர்கள். அண்மையில் எங்களுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கவும் நன்கொடை அளித்தீர்கள். அவை அனைத்திற்குமான எமது நன்றியை இந்நேரத்தில் தெரிவித்துகொள்வதோடு தொடர்ந்து உங்கள் புரிதலையும் ஆதரவையும் வேண்டுகிறது.
தமிழ் மீடியா இண்டர்நேசனல் நிறுவனம்
(Tamil Media International Inc)
தமிழ்மணம் செயல்பட்டு வந்த வழங்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தமிழ்மணம் இணைய தளத்தின் தறவிறக்கம் கடந்த சில வாரங்களாக, மிகவும் தாமதமாக இருந்து வந்தது. இந்தப் பிரச்சனையை தற்பொழுது சரி செய்திருக்கிறோம். இன்னும் சில பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் இது முழுமையடையும் என்று நம்புகிறோம். தமிழ்மணத்தின் தற்போதைய பிரச்சனைகள் களையப்பட்டு மீண்டும் ஒரு சிறப்பான சேவையை அளிக்க முடியும் என உறுதியளிக்கிறோம். அது வரை தற்போதைய சிரமங்களுக்கு பொறுத்தருள பதிவர்கள், வாசகர்களிடம் வேண்டுகிறோம்
வழங்கிச் செலவுகள் அதிகரித்து வரும் சூழலில், விளம்பரங்கள் மட்டுமே தமிழ்மணத்தின் வழங்கிச் செலவுகளை ஈடுசெய்யக்கூடியதாக இல்லை. இதன் காரணமாக, கடந்த ஏழு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தமிழ்மணம், முதன்முறையாக நன்கொடையை எதிர்நோக்குகிறது.தமிழ்மணம் தமிழின் முதன்மையான வலைத்திரட்டி ஆகும். வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத வகையில் வலைப்பதிவுகள் சார்ந்த பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கிய தளமாக தமிழ்மணம் கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தமிழ்மணத்தை லாப நோக்கு இல்லாத நிறுவனமாக செயல்பட்டு வரும் தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனம் நடத்தி வருகிறது.
தொடர்ச்சியாக வளர்ந்து வரும் தமிழ் வலைப்பதிவுகளுக்கு தடையில்லாத தரமான சேவையை வழங்க நன்கொடைகளை எதிர்பார்க்கிறோம். நன்கொடைகளை பேபால் மூலமாக செலுத்தும் வசதியினை ஏற்படுத்தியிருக்கிறோம்
நன்கொடை அளிக்க இந்தப் பக்கத்திற்கு செல்லுங்கள் - http://www.tamilmanam.net/tamilmanam_donate.php
புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…
நிர்வாகம்
தமிழ்மணம்
வலைப்பதிவுகளில் எழுதப்படும் இடுகைகளை உடனுக்குடன் தமிழ்மணத்திற்கு அளிக்கவும், மறுமொழிகளை உடனுக்குடன் திரட்டவும், வாசகர் பரிந்துரைக்காக வாசகர்களிடம் இருந்து வாக்குகளை திரட்டவும் பதிவுப்பட்டைச்சேவையை தமிழ்மணத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே வழங்கி வந்துள்ளோம். உடனுக்குடன் மறுமொழிகளும், இடுகைகளும் வலைப்பதிவுகளில் இருந்தே ஒரு சொடுக்கிலே தமிழ்மணத்தின் முகப்பிற்கு வந்தடையும் தொழில்நுட்பம் தமிழ்மணத்தின் சிறப்பம்சமாகவும் இருந்து வந்துள்ளது.
ஆனால், இன்றைக்கு வலைப்பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நிலையில் ஒவ்வொரு வலைப்பதிவும் வாசிக்கப்படும் பொழுதும் பதிவுப்பட்டை சேவை தமிழ்மணத்தின் வழங்கிக்கு அழுத்தத்தைக் கொடுக்கிறது. அது தவிர வலைப்பதிவுகளிலே தரவிறக்கமும் தாமதமாகிறது. இப்பிரச்சனை தமிழ்மணம், வலைப்பதிவர்கள் என அனைவரையும் பாதிக்கும் நிலையில், இச்சேவையை இடைநிறுத்தத் தமிழ்மணம் நிர்வாகம் தள்ளப்பட்டிருக்கின்றது.
இச்சேவையில் உள்ள பிரச்சனைகள் களையப்பட்டு மேலும் மேம்படுத்தப்பட்ட சேவை வரும் வரையில் வாசகர் பரிந்துரை, மறுமொழிகள் திரட்டுதல் போன்ற சேவைகள் இயங்காதெனத் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் இந்த சேவைகள் மீண்டும் செயற்படத் தொடங்கும்.
இதனால், பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் ஏற்படும் சிரமத்திற்கு வருந்துகிறோம்.
புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி
நிர்வாகம்
தமிழ்மணம்
தமிழ்மணம் விருதுகள் 2010 நிகழ்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக் கூப்பனை மின்னஞ்சலில் அனுப்பி இருக்கிறோம். இதனைக் கொண்டு சென்னை நியூ புக்லாண்ட்ஸ் புத்தகக் கடையிலும், நூல் உலகம் இணையத்தளத்திலும் (http://www.noolulagam.com/) புத்தகங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
நியூ புக்லாண்ட்ஸ் புத்தகக் கடைக்கு செல்லும் பொழுது மின்னஞ்சலை அச்சு எடுத்து செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம். வெளியூரில் இருந்தால் நியூ புக்லாண்ட்ஸ் புத்தகக் கடையை தொடர்பு கொண்டு அஞ்சல் மூலமாக புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம்.
புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி…
நிர்வாகம்,
தமிழ்மணம்
தமிழ்மணம் பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த இனிய தமிழர் திருநாளில் தமிழ்மணம் விருதுகள் 2010 முடிவுகளை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த விருதுகள் நிகழ்வு வலைப்பதிவுகளில் நல்ல ஆக்கப்பூர்வமான எழுத்துக்களை வளர்க்கவும், ஊக்குவிக்கவுமே வழங்கப்படுகின்றன. வரும் ஆண்டுகளில் அத்தகைய எழுத்துக்கள் வலைப்பதிவுலகில் பெருகும் என நம்புகிறோம்.
2010ம் ஆண்டு விருதுகள் தமிழ்மணம் விருதுகளின் 3வது நிகழ்வு ஆகும். ஒவ்வொரு ஆண்டும் பதிவர்களும், வாசகர்களும் ஆர்வத்துடன் பங்கேற்பது வலைப்பதிவுகளின் வளர்ச்சியையே காட்டுகிறது எனக் கருதுகிறோம். கடந்த ஆண்டினைக் காட்டிலும் இந்த ஆண்டு பதிவர்களின் பங்கேற்பு அதிகமாகவே இருந்தது. இந்த ஆண்டு விருதுகள் நிகழ்வில் சில மாற்றங்களை கொண்டு வந்திருந்தோம். அதிகளவில் சுமார் 20 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. அதோடு மூன்றாவது கட்டத் தேர்வில் நடுவர் குழுவின் தேர்வு இருந்தது. தமிழ்மணம் நிர்வாகம் மற்றும் வலைப்பதிவர்களை உள்ளிட்ட நடுவர் குழு அமைக்கப்பட்டு இடுகைகள் தேர்வு செய்யப்பட்டன. நடுவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, குறித்த தேதிக்குள் தங்களது மதிப்பெண்களை அளித்தனர். அவர்களின் ஆர்வத்திற்கு எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஆண்டு போட்டியின் சிறப்பம்சமாகப் பெண் பதிவர்களுக்கான தனிப்பிரிவு உருவாக்கப்பட்டிருந்தது. மகளிர் மட்டும் என்பது போல முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பங்கேற்று, பெண் நடுவர்களால் இடுகைகள் பரிசீலனை செய்யப்படும் வகையில் இந்தப் போட்டியினை உருவாக்கியிருந்தோம்.
தமிழ்மணத்தில் 2010ம் ஆண்டு மட்டும் சுமார் 1 லட்சத்து நாற்பதாயிரம் இடுகைகள் திரட்டப்பட்டுள்ளன. இதில் இருந்து சுமார் 1511 இடுகைகள் போட்டியில் பங்கேற்றன. இந்த 1511 இடுகைகளில் இருந்து 40 இடுகைகள் சிறந்த இடுகைகளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பெரிய பணியை செய்வதில் எங்களுக்குத் துணையாக இருந்த பதிவர்கள், வாசகர்கள், நடுவர்கள், விளம்பரதாரர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்மணம் விருதுகள் நிகழ்வு என்பது பதிவர்களை ஊக்குவிக்கும் ஓர் அடையாளம் மட்டுமே. பரிசுத் தொகை என்பதும் ஓர் அடையாளத்தொகை மட்டுமே. என்றாலும் இந்த ஆண்டும் ரூ45,000.00 மதிப்புள்ள பரிசுகளை இந்த நிகழ்வில் அறிவித்து இருந்தோம். வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுக்கூப்பன் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும். பரிசுக் கூப்பனைக் கொண்டு உடனே பரிசுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறோம். நியூபுக்லாண்ட்ஸ் கடைக்கு நேரில் செல்ல முடியாவதர்கள் நியூபுக்லாண்ட்சைத் தொடர்பு கொண்டு அஞ்சல் மூலம் புத்தங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இது தவிர நூல் உலகம் வழங்கும் புத்தக கூப்பனைக் கொண்டு இணையத்தில் பரிசுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த விருதுகள் நிகழ்வில் எங்களுடன் உறுதுணையாக இருந்து ஒத்துழைத்த நடுவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடன் பணியாற்றிய நடுவர்களின் பெயர்கள்.
தருமி, தமிழ்நதி, டாக்டர். ருத்ரன், துளசி கோபால், வினவு, சுரேஷ் கண்ணன், குழலி, கோவி.கண்ணன், டாக்டர். புருனோ, செந்தழல் ரவி, சுசீலா, சந்தனமுல்லை, கவிதா, TV ராதாகிருஷ்ணன், பழமைபேசி, ரவிச்சந்திரன், சீனா, து.குமரேசன் (விருபா), ஜாக்கி சேகர், பிரசன்னா, கேபிள் சங்கர், ஜோதிஜி, கேஆர்பிசெந்தில், சங்கரபாண்டி, தமிழ் சசி, இரமணீதரன், செல்வராசு, காசி ஆறுமுகம், இளங்கோ, விஜய் மணிவேல், கார்த்திக் ராமாஸ், பாலாஜி பாரி, சுந்தரவடிவேல், தாரா, மயிலாடுதுறை சிவா, நா.கணேசன்
தமிழ்மணம் விருதுகள் 2010ம் ஆண்டு வெற்றி பெற்றவர்களின் பட்டியல் இந்தப் பக்கத்தில் உள்ளது.
http://tamilmanam.net/awards2010/winners2010.php
புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…
தமிழ்மணம் விருதுகள் ஒருங்கிணைப்பு குழு
தமிழ் சசி
சங்கரபாண்டி
இரமணீதரன்
செல்வராசு
விஜய் மணிவேல்
தமிழ்மணம் விருதுகள் 2010 நிகழ்வில் இரண்டாம் சுற்றில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் இந்தச் சுட்டியில் உள்ளது
http://www.tamilmanam.net/awards2010/2nd_round_results.php.
இந்தப் பட்டியலில் உள்ள இடுகைகள் நடுவர் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். நடுவர் குழுவின் பரிசீலனை அடுத்த சில நாட்கள் நடைபெறும். முடிவுகள் பொங்கல் தினத்தன்று வெளியாகும்.
போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்ற பதிவர்களுக்கும், வாக்களிப்பில் பங்கேற்ற பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
தமிழ்மணம் விருது தேர்வுக் குழு








